பஞ்சமி நிலம்.. புறநகரில் மனை வாங்கறீங்களா? அதென்ன DC நிலம்? யாருக்கெல்லாம் பஞ்சமி நிலம் வழங்கப்படும்
சென்னை: புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் ஒருசில விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் தரப்பினர் அடிக்கடி வலியுறுத்தியபடியே இருக்கிறார்கள். அந்தவகையில் பஞ்சமி நிலம் என்றால் என்ன என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கடந்த 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் தான், டி.சி நிலம் 0 Depressed Class Land என்று சொல்லக்கூடிய பஞ்சமி நிலமாகும்.

தானம்: இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.. ஆனால், முதல் 10 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது. அப்படியே அவர்கள் விற்பதாக இருந்தால் அவர்கள் வகுப்பை சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமம் வழங்கப்பட்டது.
அவர்கள் காலத்திலிருந்தே, பஞ்சமி நிலம் தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விற்பனை: அதுமட்டுமல்ல, ஆங்கிலேய அரசு இலவசமாக தந்த இந்த பஞ்சமி நிலங்களை ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களைத் தவிர வேறு யாரும் வாங்கக்கூடாது.. அப்படியே வாங்கினாலும் அந்த விற்பனை செல்லாது, அந்த நிலத்தை அரசு பறிமுதல் செய்துவிடலாம் என்றும் சட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கிறதாம். ஆதி திராவிட மக்களை யாருமே ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயே அரசு இப்படியொரு சட்டதிட்டத்தை கொண்டுவந்திருந்தது.
அதற்காகவே, பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, புறநகர் பகுதிகளில் நிலம் வாங்க விரும்புபவர்கள், பஞ்சமி நிலம், அதன் பட்டா பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.. எங்கே மனை, இடம் வாங்க நினைக்கிறீர்களோ, அந்த பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இதை பற்றி அறிந்து கொள்ளலாம்..
பதிவேடுகள்: சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் பதிவேடுகளை, அங்கு புத்தகங்களில் பதிவேற்றம் செய்திருப்பார்கள்.. எனவே நீங்கள் வாங்க முடிவு செய்திருக்கும் நிலத்தின் சர்வே நம்பரை வைத்து, அந்த நிலம் பஞ்சமி நிலமா? கண்டிஷன் நிலமா? கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா? கள்ளர் நிலமா? ஆதிதிராவிடர் நிலமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருந்தால், அதை வாங்காமல் தவிர்க்கலாம்..
அதேபோல, நகர்ப்பகுதிகள் மனை அல்லது நிலம் வாங்க நேர்ந்தாலும், பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR போன்ற ஆவணங்களை கவனித்து பார்ப்பதும் அவசியமாகும்.












Click it and Unblock the Notifications