சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்.. கண்ணீர் மல்க கோரிக்கை
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மூன்று வயது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியை சோ்ந்த கட்டுமான தொழிலதிபா் மனோஜ் என்பவரிடம் சுகுமாறன் என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். மனோஜின் வீட்டில் உள்ள பணியாளா்கள் குடியிருப்பில் சுகுமாறன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் செப்டம்பர் 12ம் அன்று மாலை, சுகுமாறனின் 2-ஆவது மகனான 3 வயதாகும் ரித்தீஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே, விளையாடிக் கொண்டிருக்கும் போது, குளத்தில் விழுந்துவிட்டாா். அதை சிறிது நேரம் கழித்து கவனித்த சுகுமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தை ரித்தீஸை மீட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது மருத்துவமனையில் ரித்தீஸை பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மீண்டும் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏதும் இல்லை என்றும் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது என்றும் இதனால் இனி யாரும் பாதிக்கப்படாத வண்ணம் . ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதி மக்களுக்காக அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் சென்னையில் ஓஎம்ஆர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விபத்துகள் ஏற்பட்டால், அல்லது மிக அவசரமான சிகிச்சை வேண்டும் என்றால், அவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அல்லது சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நிலையே இருக்கிறது. கிட்டத்தட்ட 25 கிமீ தூரம் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ்கள் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
ஏனெனில் கோவளம், கானத்தூர், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதியில் விபத்து நடந்தால் பெரிய அளவில் சிகிச்சை தர போதிய வசதி உள்ள அரசு மருத்துவமனைகள் ஈசிஆர் சாலையில் இல்லை.. தனியார் மருத்துவமனைகளில் தான் சேர்க்க வேண்டிய நிலை இருக்கிறது. அதேநேரம் , ஈ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடப்பதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவனையை 100 படுக்கை வசதி மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.












Click it and Unblock the Notifications