7 தமிழர், 38 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் மற்றும் 38 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அடிப்படையில் அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்- சு.சுவாமியின் கூச்சல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம்: பழ. நெடுமாறன்
7தமிழர்கள், 38 முஸ்லிம் கைதிகள்
20ஆண்டுகாலம் சிறைவாசம் முடித்தவர்கள் மட்டுமல்ல, 10ஆண்டுகள் நிறைவு செய்தவர்களையும் விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் இந்த ஆணையில் வெளியிடப்பட்டுள்ளன. இதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் வாடும் 7பேர்களையும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் 38 முஸ்லிம்களையும் விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
பாரபட்சம் கூடாது- உச்சநீதிமன்றம்
கடந்த காலத்தில் அண்ணா நூற்றாண்டு விழா போன்ற முக்கிய அரசு விழாக்களின் போதுகூட இவர்கள் விடுவிக்கப்படவில்லை. மேலே கண்ட சிறைவாசிகளில் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அவர்களுக்குக் கருணை காட்டப்படவில்லை. கீழவெண்மணியில் 44பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும், மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைவாசிகளை விடுதலை செய்யும்போது பாரபட்சம் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
மாநில அரசுக்கு அதிகாரம்
மேலும் 14 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு பெற்ற கைதிகளை விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, மேற்கண்டவர்களை விடுதலை செய்வதற்கு விதிமுறைகள் ஏதேனும் தடையாக இருக்குமானால், சிறப்பு ஆணையின் மூலம் அவற்றை நீக்கி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வரும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அரசாணை
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15-ந் தேதி தமிழக அரசின் உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத, மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சம் என விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.