சென்னை ஓஎம்ஆர் சாலையில் 4 டோல்கேட்களில் இன்று முதல் இலவச பயணம்.. வாகன ஓட்டிகள் ஹேப்பி!
சென்னை "ஓஎம்ஆர்" சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் கிளைகள் அமைத்துள்ளன. சென்னையின் ஐ.டி. ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது ஓஎம்ஆர் ரோடு.
இந்த நிலையில்தான், மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி கிராமம் வரை 20.1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதைகள் அமைக்கப்பட்டன.

5 இடங்களில் டோல் வசூல்
இந்த சாலை நவீன வசதிகளுடன் பளபளக்கிறது. இரவை பகலாக்கும்படியான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வசதி கொடுத்த பிறகு கட்டணம் வசூலிக்காமலா? ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

போராட்டங்கள்
இந்த சாலையில், நாள்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் சாலையில் 13 ஆண்டுகளாக கட்டண வசூலில் ஈடுபடுகின்றன சுங்கச் சாவடிகள். ஆனால் இவற்றை மூடக் கோரி போராட்டங்கள் நடந்துள்ளன. கடந்த ஆட்சியின் போது, இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மெட்ரோ பணிகள்
இந்த நிலையில்தான், தற்போது ஓம்.எம்.ஆர். சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதால், பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சட்டசபையில் அறிவித்தார்.

நாவலூர் நிலவரம்
இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே கட்டணம் இல்லாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடி குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது. நாவலூர் சுங்கச்சாவடி சென்னை மாநகராட்சி எல்லைக்கு அருகில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால் இதுகுறித்து தெளிவான விளக்கத்தை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications