3வது அலையிலிருந்து தப்பிக்க.. மக்களே ரொம்பக் கவனமா இருங்க.. மாஸ்க்கை கழற்றிடாதீங்க!
சென்னை: கொரோனா 2வது அலை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், 3வது அலை குறித்த அச்சம்தான் மக்களிடம் அதிகமாக உள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 2-ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் வந்துகொண்டேதான் உள்ளன.
இந்நிலையில் கொரோனா 3-ம் அலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசுக்கு அறிவுறுத்தல்
கட்டுப்பாட்டு விதிகள் சரியாக பின்பற்றாமல் இருப்பது போன்றவையே 3-ம் அலை பாதிப்புகள் அதிகரிக்க காரணம். எனவே 3-ம் அலை பரவலை தடுக்க அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அமலில் உள்ளது. இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிப்பு குறைவு
தமிழகத்தை பொறுத்த வரை அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைப்பிடிப்பதால் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் முககவசம் அணிவதை அன்றாட கடமைகளில் ஒன்றாக பின்பற்றி வருகின்றனர். அதன் பலனாக சென்னையில் குடிசை, ஓட்டு வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மாஸ்க் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாஸ்க் போடுங்கப்பா
அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 21% பேர் முககவசம் அணிந்து கொண்டு இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 41% அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரின் பிற பகுதிகளில் முககவசம் அணிவோர் எண்ணிக்கை 47%-மாக உயர்ந்துள்ளது. ஆனால், அதேநேரத்தில் குடிசை பகுதியில் 38% பேரும், மற்ற பகுதிகளில் 25% மக்களும் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

கவனம் தொடர வேண்டும்
கொரோனா 3-ம் அலையின் அதிக அளவு பாதிப்புகளை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மக்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் கொரோனாவை வென்று நம் தலைமுறையை துளிர்க்க வைக்க முடியும்.












Click it and Unblock the Notifications