நற்செய்தி.. இ - பதிவு இணையதளத்தில் திருமணத்திற்கான அனுமதி மீண்டும் சேர்ப்பு!
சென்னை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இ - பதிவு இணையதளத்தில் திருமணத்திற்கான அனுமதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதிக விண்ணப்பங்கள் வந்ததால் நேற்று திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டிருந்த நிலையில். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் திருமணத்திற்கான அனுமதி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி காலை வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
மே 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இன்று முதல் சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு கட்டாயம்.. வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்
எவை எவை
இதில் தனிநபா்கள் இந்த நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும். மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்கள், திருமணம் ஆகிய காரணிகள் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தடையின்றி பயணிக்கலாம்
அதாவது தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பயணம் செய்ய இ-பதிவு மட்டும் செய்தால் போதும். பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
திருமணம் காரணம் நீக்கம்
இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் பலரும் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று இ பதிவு செய்தனர். இதையடுத்து இ-பதிவில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதாக கருதிய அரசு, அதை நீக்கியது. அதேநேரம் மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு ஆகிய காரணங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது.
பொதுமக்கள் கோரிக்கை
இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. திருமணம் என்ற காரணம் இ பதிவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், திருமணம் நின்றால் பல குடும்பங்களில் தவறாக எண்ணி வருத்தப்படுவார்கள் என்று கூறினர். மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இபதிவில் மீண்டும் திருமணத்தை சேர்க்க கோரினர். இந்த கோரிக்கை ஏற்று அரசு, இ - பதிவு இணையதளத்தில் திருமணத்திற்கான அனுமதி மீண்டும் சேர்த்துள்ளது. இன்று முதல் திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இ பதிவு செய்து கொள்ளலாம்.