தென் மாவட்ட ஸ்கெட்ச்! பலமாகும் பாமக ‘அன்புமணி தம்பி தங்கைகள் படை’! ‘மஞ்சள் அணி’ பணிகளும் தீவிரம்!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வன்னியர் சங்கத்தில் மஞ்சள் அணி மற்றும் பாமகவில் அன்புமணியின் தம்பி தங்கைகள் படையை தமிழகம் முழுவதும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியில் எதிர்கால நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவியேற்றார். தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார் ஜிகே மணி.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் பல வியூகங்களை வகுக்க பாமக தரப்பு தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் பல்வேறு நிலைகளில் சீர்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அன்புமணி ராமதாஸ்
கட்சியில் மாநில அளவில் இருந்த பல பொறுப்புகள் நீக்கப்பட்டு, மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் நியமனம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவிரி நீர் பிரச்சனை, அரியலூர் தண்ணீர் பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீர் ஆதார பிரச்சனைகளை மையமாக வைத்து நடைபயணம் பேரணி என தீவிரம் காட்டி வருகிறார் அன்புமணி. நாடாளுமன்ற தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி சேர போகிறது என்பதும் பேசுபொருளாக இருக்கிறது.
யாருடன் கூட்டணி
ஒருபுறம் பாஜக தங்கள் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை இணைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறது. இதற்காக பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக அதிமுக கூட்டணிக்கு ஆட்சி கிடைக்கவில்லை என்றாலும் அது குறிப்பிட தகுந்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக, பாமக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் நுழைவதற்கு இந்த கூட்டணி காரணமாக அமைந்தது. இதனால் இதே கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா என்றும் அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு பாமக சென்று விடுமா என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல்
இதையெல்லாம் விட 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தான் அன்புமணி சிந்தித்து வருவதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர் நாடாளுமன்றத் தேர்தலை வியூகம் அமைப்பதற்கான ஒரு பகுதியாகவே நினைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்பது அன்புமணியின் இலக்கு அதற்காக பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் தொண்டர்களை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியில் புதிய நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பாமக இளைஞரணி
வட மாவட்டங்களில் மிக வலுவாக இருக்கும் பாமக இளைஞரணி போன்ற மற்றொரு அமைப்பான அன்புமணியின் தம்பி தங்கைகள் படை போல தென் மாவட்டங்களில் விரிவு படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு மாவட்ட தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போல பாட்டாளி மக்கள் கட்சியின் தாய் அமைப்பாக கருதப்படும் வன்னியர் சங்கத்திலும் சங்கத்தின் இளைஞர் படையை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்ட திட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக 2000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தென் மாவட்டங்களிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் அன்புமணி வட மாவட்டங்களைப் போல தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறார். இதனால் கடந்த ஆண்டுகளை விட வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் பாமக எழுச்சி பெறும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.