வேட்பாளரையே கடத்துறாங்க..இதுதான் திமுக ஜனநாயகமா? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை : வேலூர் மாநகராட்சி தேர்தலில் பாமக வேட்பாளர் கடத்தி மிரட்டியுள்ளதாகவும் இது தான் திமுகவின் ஜனநாயகமா என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களை கவர்வதற்காக பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடுவதற்கு திமுக அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேயர் தேர்தலுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 31 வார்டுகளில் வெற்றி பெறுபவர் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

பாமக வேட்பாளர்
அதிமுக திமுக போலவே பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களம் இறங்குகின்றன. பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 24 மாவட்டத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் பரசுராமன் என்பவரை திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்தி சென்று போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மிரட்டுவதாக தகவல் வெளியானது. போட்டியிலிருந்து விலகாவிட்டால் தொழில் செய்ய முடியாது என மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் கண்டனம்
இந்நிலையில் வேட்பாளர்களை காட்டி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது!"

வேட்பாளர்களை மிரட்டக் கூடாது
மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என அந்த பதிவில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications