ரயில் நிலையங்களா? இந்தி திணிப்பு மையங்களா? மத்திய அரசின் மறைமுக இந்தி திணிப்பு.. ராமதாஸ் கோபம்
சென்னை: ரயில் நிலையங்களில் மறைமுக இந்தித் திணிப்பை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 1. திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது!
2. மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில் உள்ளூர் மொழியான தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம்!
திருப்பூர் தொடர்வண்டி நிலையம்
3. ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும்!
இந்தியை திணிக்க முயற்சி
4. புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்!
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் எதிர்ப்பு
மத்திய அரசு இந்தியை மறைமுகமாக திணித்து வருவதாக தமிழகத்தில் கடும் குற்றச்சாட்டு நிலவுகிறது. ரயில்நிலையங்களில் இந்தியில் தகவல் பலகை, நாடாளுமன்ற அலுவல் மொழியாக இந்தி, இணைப்பு மொழி இந்தி, விமான நிலையங்களில் பயணிகளிடம் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழியில் பேசாமல் இந்தியில் பாதுகாப்பு வீரர்கள் பேசுவது- இப்படியாக இந்தியை மத்திய அரசு திணிப்பதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இரு மொழி கொள்கை
ஆனால் தமிழகத்தை பொருத்தவரை இரு மொழிக் கொள்கைதான் என மாநில அரசு கூறி வருகிறது. மத்திய அரசு இந்தியை நாங்கள் திணிக்கவில்லை என்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ இந்திக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. இந்தி திணிப்புக்கு மட்டுமே நாங்கள் எதிர்ப்பு என்கிறார்கள். இப்படியாக இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்ப்புகளும் ஆதரவுகளும் குவிந்துள்ளன. இந்தி திணிப்புக்கு எதிராக சேலம் மாவட்டம் நங்கவள்ளி கிராமத்தில் விவசாயி தங்கவேல் என்பவர் தாழையூர் திமுக அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர். கடந்த காலங்களில் இந்தி தெரியாது போடா எனும் வாசகம் தமிழகத்தில் வைரலானது. பலர் இந்த வாசகத்தை டீ சர்ட்டுகளில் பொரித்து கொண்டிருந்தனர். மத்திய அமைச்சர் அமித்ஷா இணைப்பு மொழி இந்தி என கூறிய போது இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானோ தமிழ்தான் இணைப்பு மொழி என கூறி பரபரப்பை கிளப்பினார்.