பரபர திருப்பம்.. திருவான்மியூர் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக்கூடு.. விசாரணையில் சுவாரஸ்ய தகவல்
சென்னை: அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் குப்பைத் தொட்டியில் எலும்புக்கூடு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்த நிலையில், அது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை திருவான்மியூர் சாஸ்திரி நகர்ப் பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளைச் சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்தின் தூய்மை பணி ஒப்பந்த ஊழியர் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தங்கம் பழனி காலையில் வந்து அள்ளிச் செல்வது வழக்கம்.
அப்படிக் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி காலையும் வழக்கம் போல் குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்தார்.

குப்பைத்தொட்டியில் எலும்புக் கூடு
அப்போது அந்த குப்பைத் தொட்டியில் கயிற்றால் சுற்றப்பட்ட ஒரு பெரிய பிளாஸ்டிக் பை ஒன்று இருந்துள்ளது. அந்த பை கனமாக இருக்கவே சந்தேகமடைந்து, அதை எடுத்துப் பிரித்துப் பார்த்துள்ளார். அந்த பைக்குள் மனித எலும்புக் கூடு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பழனி தங்கம், அலறி அடித்து ஓடியுள்ளார். பின் ஒருவாறாகச் சுதாரித்துக்கொண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

தடயவியல் ஆய்வாளர்கள்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்த மனித எலும்புக் கூட்டை கைப்பற்றினர். மேலும், தடயவியல் சோதனைக்கும் அனுப்பி வைத்தனர். தடயவியல் சோதனையில் அந்த எலும்புக்கூடு மீது வார்னிஷ் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் எலும்புக்கூட்டில் இருக்கும் எலும்புகள் அனைத்தும் ஒரே நபருடையது இல்லை என்றும் தடயவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சிக்கிய காவலாளி
பொதுவாக இதுபோல வார்னிஷ் பெயிண்ட் அடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மருத்துவ படிப்புகளிலேயே பயன்படுத்தப்படும் என்றும் இந்த எலும்புக்கூட்டை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படிப்புக்காகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் தடயவியல் ஆய்வாளர்கள் கூறினர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராக காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர் அப்போது அதே பகுதியில் பணிபுரியும் வீட்டின் காவலாளி ஒருவர் எலும்புக்கூடு இருக்கும் பையைக் குப்பைத் தொட்டியில் வீசிச்சென்றது தெரிய வந்தது.

மருத்துவ மாணவியிடம் விசாரணை
இதையடுத்து அந்த காவலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தான் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளரின் நண்பர் ஒருவரின் மகள் மருத்துவக் கல்லூரி மாணவி என்றும் அவர் எலும்புக்கூடு இருந்த பையை வீட்டில் வைத்து விட்டுச் சென்றதாகவும் கூறிய அந்த காவலாளி, அந்த பையைத்தான் குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பூந்தமல்லியில் இருக்கும் அந்த மருத்துவக் கல்லூரி மாணவியிடமும் இந்த எலும்புக்கூடுகள் குறித்து போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications