சென்னை ஹைகோர்ட் அருகே காவல்துறையினர் - வக்கீல்கள் இடையே வாக்குவாதம் - போக்குவரத்து பாதிப்பு
சென்னை உயர்நீதிமன்றம் அருகே போலீஸ்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அருகே போலீஸ்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவில் வழக்கில் வழக்கறிஞரை அண்ணா சாலை காவல் நிலையத்தினர் கைது செய்ய வந்ததால், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளரை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாரிமுனை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில், சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு ஒன்றில் வழக்கறிஞர் ஆதிகேசவன் என்பவர் முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அவருக்கு எதிராக மார்ச் 24ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த ஜாமீனில் வரமுடியாது பிடிவாரண்ட் நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை ஆஜர்படுத்தாதது குறித்து நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையில் வழக்கறிஞர் ஆதிகேசவன் முன்ஜாமீன் கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் எதிரில் வழக்கறிஞர் ஆதிகேசவனை அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் குமரன் ஆகியோர் கைது முற்பட்டபோது, சக வழக்கறிஞர்கள் தடுத்துடன், புதிய உத்தரவு இல்லாமல் கைது செய்வதாகவும், சிறப்பு உதவி ஆய்வாளர் மது அருந்தி இருந்ததாகவும் வழக்கறிஞர்கள் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, காவல் நிலையத்தினரை கைது செய்ய வலியுறுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குறளகம் முதல் பாரிமுனை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிகப்பெரிய மோதல் மூண்டது. நீதிமன்றத்திற்கு வந்த சுப்ரமணியம் சாமி மீது முட்டை எறிந்து தாக்குதல் நடத்திய வக்கீல்களைக் கைது செய்ய காவல்துறையினர் சென்றதைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து கைதான வழக்கறிஞர்களை மீட்க மற்ற வக்கீல்கள் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து காவல்துறையினருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் இறங்கினர். வக்கீல்களும் கல்வீச்சில் குதித்தனர். இரு தரப்பும் நடத்திய சண்டையைப் பார்த்து நாடே அதிர்ந்து போனது. இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் காயம் அடைந்தனர்.
அது போல ஒரு சம்பவம் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்று அச்சப்படும் வகையில் இன்றைய தினம் காவல்துறையினர் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் மூண்டது. உயர்நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞரை கைது செய்ய வந்த காவல்துறையினருக்கு மற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடிபோதையில் காவலர்கள் கைது செய்ய வந்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனால் பாரிமுனை பகுதியில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.