இ-பதிவு இல்லாத வாகனங்களை வந்த வழியே திருப்பியனுப்பும் போலீஸ்.. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு
சென்னை: தமிழகத்தில், இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 24ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
சபாஷ்.. ஆக்சிஜன் வசதியுடன் 2 பஸ்கள்.. ஒரே நேரத்தில் 24 பேருக்கு சிகிச்சை.. கோவை ஆஸ்பத்திரியில்..!
இதனிடையே மாவட்டங்களுக்குள் உள்ளேயும், மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இ-பதிவு முறை செய்த பிறகே செல்ல வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட எல்லைப்பகுதியான பெருநகர் தாமல் செவிலிமேடு செட்டிபேடு மணிமங்கலம் ஆகிய 5 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இ பதிவு முறை
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே நேற்று காலை 6 மணி முதல் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் காஞ்சிபுரத்திற்கு யார்? யார்? வருகிறார்கள் என்பதை கண்காணித்தனர்.
திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்
மேலும் அவர்களது முகவரிகளை போலீசார் குறிப்பெடுத்துக் கொண்டனர். அப்போது கார்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி இ-பதிவு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகு அவர்களை மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்தனர். அதே சமயம் இ-பதிவு செய்யாமல் வந்த சில வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எல்லைகள்
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையான செட்டிபேடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி இ-பதிவு உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர்.
முகக் கவசம்
இ-பதிவு அமல்படுத்தப்பட்ட முதல் நாளான நேற்று பலர் பதிவு பெற முடியாததால் இ-பதிவு இல்லாமலேயே வாகனத்தில் வந்தனர். இதனால் போலீசார் அவர்களை இனி இ-பதிவு இல்லாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்.