ரொம்ப நேரம் பட்டாசு வெடிச்சா போலீஸ் டீம் போட்டு கைது செய்வீர்களா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு என்ன போலீஸ் டீம் போட்டு கண்காணிக்குமா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு என்ன போலீஸ் டீம் போட்டு கண்காணிக்குமா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால் அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.
இந்த திடீர் விதிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த விதிமுறை குறித்து கருத்து கூறியுள்ளார். யார் எப்போது வெடி வெடிக்கிறார்கள் என்று அரசு எப்படி கண்காணிக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
அவர் தனது பேட்டியில், காலங்காலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் சிதைக்கப்படுவதை மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடம் இவர்கள் எந்த சட்டத்தை புகுத்த பார்க்கிறார்கள்.
பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள்தான். அவர்களை எதை வைத்து தடுப்பார்கள். இவர்களை என்ன செய்ய போகிறார்கள்.
யார் எப்போது வெடி வெடிக்கிறார்கள் என்று அரசு எப்படி கண்காணிக்க முடியும். எல்லா வீட்டுக்கும் போலீஸ் போட போகிறார்களா. இல்லை தெருவுக்கு ஒரு டீம் போட்டு கண்காணிக்க போகிறார்களா? அதிக நேரம் பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்வீர்களா?
தீபாவளியை போலவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படி செய்வார்களா? கிறிஸ்துமஸ் விழாவில் பட்டாசு வெடிக்கக்கூடாது. ஆடு, மாடு வெட்டக்கூடாது என்று சட்டம் போட தயாரா?
இது மக்கள் கூடி பல வருடமாக கொண்டாடும் பாரம்பரிய சந்தோச விழாக்கள். இதை சீரழிக்க யோசிக்க கூடாது என்று கூறியுள்ளார்.