ஓசி பயணம்.. விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்.. அந்த கேள்வியை விடுப்பா! -அமைச்சர் பொன்முடி
சென்னை: ஓசி பயணம் தொடர்பாக தாம் விளையாட்டாக பேசியதை பெரிது படுத்த வேண்டாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாமல் பயணிக்கும் சலுகையை முதல்வர் வழங்கியுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி அதனை ஓசி பயணம் எனக் குறிப்பிட்டார்.
இது எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் கண்டனத்தை பெற்றதோடு சமூக வலைதளங்களிலும் அமைச்சர் பொன்முடி மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் ஓசியில் பயணிப்பதாக பெருமை பொங்க குறிப்பிட்டார். நகைச்சுவைக்காக அவர் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஓசி பயணம்
எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பொன்முடியின் வீடியோவை மேடையிலேயே ப்ளே செய்து காண்பித்தார். இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம், ஓசி பயணம் என்று அவர் பேசியது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் கோபமான அமைச்சர் பொன்முடி, அந்த கேள்வியை விடுப்பா என கடுகடுத்தார்.

பெரிதுபடுத்த வேண்டாம்
மேலும், இதை கேட்பதற்காக 4 பேர் வந்துவிடுகிறீர்கள் என ரொம்பவும் அங்கலாய்த்த அமைச்சர் பொன்முடி, விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அதை பேசியதாகவும் கூறினார். மேலும், அதைப் பற்றி கேள்விகள் கேட்கக்கூடாது என செய்தியாளர்களுக்கு தடை போட்ட அவர், உயர்கல்வித் தொடர்பாக மட்டும் தன்னிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என பாடமும் எடுத்தார்.

தொடர் சர்ச்சைகள்
திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் இப்படி தொடர்ந்து வம்பை விலைக்கு வாங்கி சர்ச்சைகளில் சிக்கி வருவதால் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மூர்த்தி, கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவசங்கர் ஆகியோர் அண்மையில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications