கொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு
சென்னை: கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனைகளில் நெகடிவ் என முடிவுகள் வருவது அதிகரித்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு கொரோனா பாசிடிவ் ரிப்போர்ட், அடையாள அட்டை கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. இதனால் பல்வேறு காரணங்களைச் சொல்லி மருத்துவமனை நிர்வாகங்கள் புதிய நோயாளிகளை அனுமதிக்க மருத்து வருகின்றன.

தவறான முடிவுகள்
அதேபோல கொரோனா அறிகுறிகள் இருந்தும் RT PCR பரிசோதனைகளில் நெகடிவ் என முடிவுகள் கிடைப்பவர்களின் எண்ணிக்கையும் 20%ஆக அதிகரித்துள்ளதாகச் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு false negative என்று பெயர். இதுநாள் வரை கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் கொரோனா பாசிடிவ் ரிப்போர்ட் மற்றும் அடையாள அட்டையைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரிப்போர்ட் தேவையில்லை
இதனால் அதிக கொரோனா அறிகுறிகள் இருந்தும், false negative முடிவுகள் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இன்று தனது வழிகாட்டுதல்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது, இனி கொரோனா சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு கொரோனா பாசிடிவ் ரிப்போர்ட், அடையாள அட்டை கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நோயாளியை மறுக்கக் கூடாது
மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் நோயாளிகளின் சேவைகளை மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது. ஆக்சிஜன் அல்லது அத்தியாவசிய மருந்துகள் இல்லை எனக் கூறி ஒருவர் அனுமதிக்க மறுக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், நோயாளி வேறு நகரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கொரோனா சிகிச்சை
ஒரு கொரோனா நோயாளியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவ உதவி தேவை இல்லாத நபர்களுக்கு படுக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தனது புதிய வழிகாட்டுதல்களில் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications