தெலுங்கு திரையுலகில் பிராந்திய எண்ணம்?..தெலுங்கராக பிறக்காதது என் குற்றமா?.. பிரகாஷ் ராஜ் ஆதங்கம்
சென்னை: தெலுங்கு திரையுலகில் பிராந்திய எண்ணம் இருக்கிறது இப்போது தெரிகிறது. தெலுங்கராக பிறக்காதது என் குற்றமா என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கிய போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைத் துறையினரை உறுப்பினர்களாக கொண்டிருந்தது. திரைப்படத் துறை தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வந்தது.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரைத் துறையினர் பிரிந்து தனித்தனியே சங்கங்களை அமைத்து கொண்டனர். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயருடன் தமிழ் நடிகர்கள், நடிகைகள் மட்டுமே உறுப்பினராக உள்ளனர்.
எம்ஏஏ சங்கம்
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகம் மூவி ஆர்ட்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் நடிகர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 900 நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
மோகன் பாபு
இந்தத் தேர்தலில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார். இவருக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பிரகாஷ் ராஜ் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
900 உறுப்பினர்
900 உறுப்பினர்களில் 833 பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது. இதில் விஷ்ணு மஞ்சுவுக்கு 381 வாக்குகள் கிடைத்தன. ஆனால் பிரகாஷ் ராஜுக்கு 274 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களை பிரகாஷ் ராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் எந்த மாநிலத்தையும் சேர்ந்தவர் என பார்த்து வாக்களித்தார்கள். தெலுங்கர் அல்லாதவருக்கு வாக்களிக்காதீர்கள்.
வாக்களிக்கலாம்
தெலுங்கர் அல்லாதவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால் போட்டியிடக் கூடாது என சிலர் கோஷங்களை எழுப்பினர். இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும். எனது பெற்றோர் தெலுங்கர் இல்லை. இது என் தவறோ அல்லது என்து பெற்றோர்களின் தவறோ இல்லை. ஒரு தெலுங்கு மகனை தேர்வு செய்த முடிவை நான் ஏற்கிறேன். ஆனால் எனக்கும் சுயமரியாதை உண்டு. எனவே தெலுங்கு நடிகர் சங்க பதவியிலிருந்து விலகுகிறேன் என ஆதங்கத்துடன் தெரிவித்தார். கன்னடரான பிரகாஷ் ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் தனித்து போட்டி படுதோல்வி அடைந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.