Exclusive: கமல் முதல் தனுஷ் வரை.. சினிமா ஸ்டார்களின் விவாகரத்து பின்னணி என்ன? விவரிக்கும் நிபுணர்கள்
சென்னை: பிரபலங்களின் விவாகரத்துகள் அதிகரித்துவரும் சூழலில், அவர்களின் உளவியல் சிக்கல் குறித்தும் குடும்ப அமைப்புகள் குறித்தும் பேசுகிறது இந்தக்கட்டுரை.
மனசு, காதல், காமம், திருமணம் எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானதுதான். அரசியல், விளையாட்டு, சினிமா துறைகளில் சாதித்து உச்சம்தொட்டவர்களின் வாழ்க்கையில் நடப்பதை தெரிந்துகொள்ள சாமானியர்களுக்கு எப்போதுமே ஆசை இருக்கும். குறிப்பாக திரை நட்சத்திரங்களைப் பின்பற்றும் ரசிகர்களுக்கு அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றியே வருகிறார்கள்.
பிரபலங்கள் காதல் செய்யும் போதும், அதை ஊடகங்களில் அறிவித்து திருமணம் செய்யும் போதும் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டு, அதையே பேசுவார்கள். அதேபோல், அவர்கள் விவாகரத்து நோக்கி செல்லும்போதும், அதே ரசிகர்கள் பரபரக்கவே செய்வார்கள்.
கமலஹாசன், ராதிகா, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ்,சமீபத்தில் சமந்தா,தற்போது தனுஷ் என திரைத்துறையில் விவாகரத்து செய்த நடிகர்கள் பட்டியல் பெரியது. இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அதை மதிக்க வேண்டும். அவர்களுக்கான இடத்தைக் கொடுக்கவேண்டும். இதைத்தான் அவர்களும் விரும்புவார்கள். ஆனால், தான் திரையில் ஆராதித்த நடிகனின் வாழ்க்கை குறித்த கேள்வி ரசிகர்களையும் சேர்த்தே பாதிக்கிறது.
சென்னையில் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் ஜில் ஜில் அறிவிப்பு
ட்ரெண்ட் செட்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்கள். இதுகுறித்து, இயக்குனர் ராம் கோபால்வர்மா ட்வீட் செய்துள்ளார். அதில், '' திருமணங்களில் இருக்கும் ஆபத்துகளை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்து சொல்வதில் பிரபலங்களின் விவாகரத்துகள் ட்ரெண்ட் செட்டராக இருப்பதாக தெரிவித்துள்ளார்''.
பிள்ளைகள்
''பெற்றோர்களுக்கு விவாகரத்து எவ்வளவு சரியாக இருந்தாலும், அது பிள்ளைகளைப் பாதிக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்காக எதையும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். எதுவானாலும் குடும்பம் தான் முதலில் இருக்க வேண்டும்'' என நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
சரண்யா ஜெயக்குமார்
தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமாரை, இதற்கு பின் இருக்கும் உளவியல் சிக்கல் குறித்து அறிந்துகொள்ள ஒன் இந்தியா சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். ''சில நேரங்களில் திருமணம் சிலருக்கு சரியாக அமையாது. அதனால் அவர்கள் விவாகரத்துக்குச் செல்வார்கள். பலருக்கு அது தேவையானதாகவும் இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
விவாகரத்து
திருமண உறவை சகித்துக்கொண்டு எல்லோரும் ஒன்றாக இருப்பதாகவும், இருக்க வேண்டும் என்று சொல்லிடமுடியாது. விவாகரத்து செய்தால் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என்றும் சொல்லமுடியாது. இதுவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சரியில்லா பெற்றோரிடம் இருந்து குழந்தை பிரிந்தால், ஆரோக்யமான சூழலில் வளரும். இது குழந்தைக்கு நல்லது.
சூட்டிங் காரணமா
பொதுவாக பிரபலங்கள் விவாகரத்து செய்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நியோன்யம் குறையும் போது விவாகரத்து அதிகரிக்கிறது. இருவரும் தங்களுக்காக நேரம் செலவிடுவது குறையும்போது, விவாகரத்துக்கான ஆரம்பப்புள்ளி வைக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு இதுபொருந்தும்போது, பிரபலங்கள் தொடர்ந்து அதிக நாட்கள் பிரிந்திருப்பார்கள். சூட்டிங் உள்ளிட்ட காரணங்கள் இதை அதிகரிக்கும்.
விரிசல்
சிலர் இதை அழகாக கையாளுவார்கள். சிலர் இதை கையாளத் தெரியாமல் உறவில் விரிசல் விழ காரணமாக அமைந்துவிடும். அதோடு, மீடியாக்களில் வரும் சில செய்திகளும் கணவன் மனைவி இடையே விரிசல்களை அதிகரிக்கும். இதை பிரபலங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தான் விஷயமே. பலர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து விடுவார்கள். சிலர் இதையே பெரிதாக்கி ஊதி விடுவார்கள். அது வளர்ந்து வளர்ந்து விவாகரத்து வரை சென்றுவிடுகிறது.
நேரம்
இதுபோன்ற விவாகரத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எல்லா குழந்தைக்கும் அம்மா அப்பா என எல்லோரும் தேவை. ஆனால், தாயோ தந்தையோ தங்களிடம் நேரம் செலவிட்டதே இல்லை என குழந்தைகள் நினைக்கும்போது, அவர்கள் இருப்பதும் ஒன்று தான்,இல்லாமல் போவதும் ஒன்றுதான் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதனால் அந்த பிரிவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.
பாதிப்பு
ஆனால் இதுவே ஆரோக்கியமான குடும்பமாக இருந்து, பெற்றோர்களிடம் ரொம்ப பிரியமாக இருக்கும் குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய வலியாக அமைந்துவிடும். கணவனும் மனைவியும் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடும்போது, விவாகரத்துக்குப் பிறகு உண்மையில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். அவர்கள் எதிர்காலமே பாதிக்கப்படும்'' என்கிறார் சரண்யா ஜெயக்குமார்.
உளவியல்
மனநல மருத்துவரும் சமூக ஆர்வலருமான மருத்துவர் பொற்கொடியிடம் விவாகரத்தின் உளவியல் குறித்து ஒன் இந்தியாவுக்காக பிரத்யேகமாக பேசினோம்.
''விவாகரத்து தான் முடிவு என்று சூழ்நிலை வரும்போது கணவன் மனைவி இருவரும் இணைந்து எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். இதுவே பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் நிகழ்காலத்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் அவர்களை விவாகரத்துவரை இட்டுச் செல்கிறது.
சுயநலம்
தங்களுடைய எதிர்காலம் என்று குறுகிய மனநிலையில் இருந்து யோசிக்காமல், குடும்ப சூழ்நிலை குறித்து யோசிக்க வேண்டும். பிரபலங்களுக்கு சாதிக்க வேண்டும், அடுத்து நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று இருக்கும். இதை இணை புரிந்து கொள்ள வேண்டும். அது நடக்காதபோது விவாகரத்து வரை செல்கிறது. இருவரும் அவர்களது துறையில் சிறந்துவிளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்தால், குடும்ப சூழல் விரிசலடைவதைப் பார்க்க முடியாது. அது வளர்ந்து இந்த நிலைக்கு வந்துவிடும். அதன்பிறகு அதை இருவராலும் தடுக்க முடியாது. இதனால்தான் பிரபலங்களிடையே அதிக விவாகரத்துகள் நடக்க காரணமாக அமைகிறது'' என்கிறார்.