3 விஷயத்துக்கு குறி.. ஒரு பக்கம் ஸ்டாலின்.. இன்னொரு பக்கம் பிடிஆர்.. ஒரே நாளில் அடுத்தடுத்த சரவெடி!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடந்த மூன்று விஷயங்கள் இந்த கூட்டத்தொடர் எப்படி நடக்க போகிறது என்பதை உணர்த்தி உள்ளது. திமுக அரசு என்ன மாதிரியான திட்டத்தோடு அவையை நடத்த உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல்வராக பதவி ஏற்று இருக்கும் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தும் வகையில் இந்த கூட்டத்தொடரை நகர்த்தி வருகிறார். முதல் விஷயம் கொரோனாவிற்கு பின்பான பொருளாதாரம்.
இரண்டாவது விஷயம் நீட். இந்த இரண்டு விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையிலேயே முதல்வர் ஸ்டாலினும், ஆளும் கட்சியும் சட்டசபையை நகர்த்தி வருகிறார்கள். இதற்காக திமுக சில முக்கிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திட்டம்
அதன்படி தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்பான முக்கியமான இரண்டு அறிவிப்புகளை இந்த கூட்டத்தொடரில் வெளியிடும் முடிவில் உள்ளனர். முதல் விஷயம், நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை. இரண்டாவது விஷயம் சிஏஜி அறிக்கை. இந்த இரண்டையும் இந்த கூட்டத்தொடரில் அடுத்தடுத்த நாட்களில் வெளியிட உள்ளனர். வெள்ளை அறிக்கையை ஏற்கனவே நிதி அமைச்சர் பிடிஆர் தயார் செய்துவிட்டார், வரும் நாட்களில் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.
கூட்டம்
இன்று சட்டசபை கூட்டம் நடப்பதற்கு முன்பே நிதி அமைச்சர் பிடிஆர் நிதிநிலை பற்றி பேசிவிட்டுதான் அவைக்கு வந்தார். கடந்த 5 வருடமாக சிஏஜி அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவில்லை. முடிந்தால் இன்றே நான் 5 வருட சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வேன். ஏன் இந்த அறிக்கையை இத்தனை வருடம் மறைத்தார்கள், செலவு கணக்குகளை ஏன் மறைத்தார்கள் என்று தெரியவில்லை என்று எச்சரிக்கை விடுத்துவிட்டுதான் களமிறங்கினார்.
ஏன் இப்படி
தமிழ்நாட்டின் நிதி என்ன? கடன் நிலவரம் என்ன என்று வெளிப்படையாக அறிவிக்கும் முடிவில் பிடிஆர் இருக்கிறார். அதன் ஒரு கட்டமாகவே, இன்று சட்டசபையில் பெட்ரோல் டீசல் விலையை இப்போது குறைக்க முடியாது. நிதி நிலை சரி இல்லை. நிதிநிலை சரியான பின்பே பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று வெளிப்படையாக சட்டசபையில் அறிவித்தார்.
நீட்
ஒரு பக்கம் பொருளாதாரம் குறித்து பிடிஆர் வெளிப்படையாக அறிவிப்புகளை வெளியிடும் நிலையில், இன்னொரு பக்கம் நீட் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வை தடை செய்வதே எங்கள் நோக்கம். தமிழ்நாட்டிற்கான நீட் விலக்கை நாங்கள் கண்டிப்பாக பெற்றே தீருவோம். தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து இதில் செயல்பட வேண்டும்.
பலமுறை
பிரதமர் மோடியை நான் சந்தித்த போதே பலமுறை இதை பற்றி கோரிக்கை வைத்தேன். கண்டிப்பாக நீட் விலக்கு பெறப்படும். தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு அதிமுக, பாஜகவும் ஆதரவு தரும் என்று நம்புகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு பதில் அளித்த பாஜகவும் சட்டத்திற்கு உட்பட்டு அரசின் முடிவை ஆதரிப்போம் என்று கூறினார்.
என்ன திட்டம்
முக்கியமாக நீட் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டு இருக்கும் குழு மக்களிடம் கருத்து கேட்கும் கால அவகாசம் இன்றோடு முடியும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் நீட் கண்டிப்பாக தடை செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதனால் சட்டசபையில் தமிழ்நாடு அரசு வரும் நாட்களில் பின்வரும் மூன்று முக்கியமான விஷயங்களை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. நீட் தடைக்கான மசோதா
2. நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை, நிதிநிலையை மீட்பது தொடர்பான திட்டங்கள்.
3. 5 வருட சிஏஜி அறிக்கை தாக்கல் ஆகிய செய்யப்படும்.
முடிவு
இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் பிடிஆர் ஆகியோரின் பேச்சுக்கள் இதையே உணர்த்துகிறது. பொருளாதாரம் மற்றும் நீட் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த கூட்டத்தொடரிலேயே அரசு எடுக்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நிதிநிலையை சரி செய்யும் வகையில் முறையான திட்டத்தோடு தற்போது காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.