புழல் சிறை டூ ஸ்டான்லி.. பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு தெரியுமா?
சென்னை: யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள வேங்கைவாசலைச் சேர்ந்தவர் மதன் (29). இவர் இரு யூ-டியூப் சேனல்களை நடத்தி வந்தாா்.
தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தாா். எனவே பப்ஜி மதன் என்று பட்டப் பெயர் கிடைத்தது.

பப்ஜி மதன்
இதன்பிறகு, ஃபாலோவர்களை அதிகரித்து, சம்பாதிக்க திட்டமிட்டு, ஆபாச பேச்சுக்களை ஆரம்பித்தார். தன்னோடு விளையாடும் சக பெண்களிடம் கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார் பப்ஜி மதன். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்தனர்.

ஆபாச பேச்சுக்கள்
இந்த நிலையில் வடபழனியைச் சோ்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் இந்த ஆபாச பேச்சுக்கள் குறித்து புகார் அளித்தார். சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 159 க்கும் மேற்பட்ட புகார்கள் பப்ஜி மதனுக்கு எதிராக குவிந்தன. எனவே, 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் பப்ஜி மதனை தேடி வந்தனர்.

தனிப்படை கைது
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த யூ- டியூபர் மதனை தருமபுரியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். யூடியூப்பில் அவர் இப்படி பேசி பதிவிட்டு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர் என்ற விவரம் அப்போது தெரிய வந்தது. ஆடி கார், பங்களா வீடு என பல இவருக்கு சொந்தமாக இருந்தது. விசாரணைக்கு பின்னா் அவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 6ம் தேதி கைது செய்யப்பட்டாா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதி பகுதியில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டிருந்தார்.
Recommended Video

ஸ்டான்லி மருத்துவமனை
இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு கடந்த சில வாரங்களாக முதுகு வலி ஏற்பட்டது. சிறையிலுள்ள மருத்துவமனையில் பப்ஜி மதன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி அதிகமானதால், பப்ஜி மதன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications