தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு.. திடீர் அறிவிப்பால் குழப்பம்
சென்னை: தமிழகத்தில், இந்த ஆண்டே, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மணி நேரம் இந்த தேர்வுகளுக்கான கால அளவாகும். ஒருவேளை இதில் தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். ஒருவேளை தோல்வி அடைந்தால், அதே வகுப்பில் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018-19 ஆம் கல்வி ஆண்டு முதலே இந்த பொதுத்தேர்வு அமலுக்கு வர உள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேநேரம், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரூபாய் தேர்வு கட்டணமும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களை வட்டார வள மையங்களில் வைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றால், பள்ளி வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்பதால் இதை செயல்படுத்த தமிழக அரசு யோசித்தபடி இருந்தது. ஆனால், இந்த வருடமே, இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு திடீர் கல்விச் சுமை அதிகரித்துள்ளது.