பாமகவை பேசினதுக்கு என்னை நீக்கினாங்களே.. இப்ப சிவி சண்முகத்தை நீக்குவாங்களா?.. புகழேந்தி கேள்வி
சென்னை: என்னை நீக்கினார்களே அது போல் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்தை நீக்குவார்களா என பெங்களூர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்ததாக தெரிகிறது.
இதையடுத்து அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி கூறுகையில் ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என்றார்.

புகழேந்தி நீக்கம்
மேலும் ஓபிஎஸ் கையெழுத்து இட்டதால்தான் அதிமுக சார்பில் அன்புமணி எம்பியாகியுள்ளார். எனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாமக தோற்றுவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது என புகழேந்தி தெரிவித்தார். இதையடுத்து புகழேந்தி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக தோல்வி
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைய பாஜகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாக பேசினார். இதனால் பாஜகவினர் கடும் கோபமடைந்தனர். மேலும் அதிமுகவால்தான் பாஜக தோற்றது என பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்திருந்தார்.

விரிசல் இல்லை
இதனிடையே அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். சிவி சண்முகம் கூறியது கட்சியின் கருத்து அல்ல என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீக்குவார்களா
இந்த நிலையில் இதுகுறித்து பெங்களூர் புகழேந்தி கூறுகையில் கட்சி தலைமையின் கூட்டணி கணக்கு சரியில்லை என சி வி சண்முகம் தாமதமாக கூறியிருந்தாலும் அது உண்மைதானே. எனவே என்னை போல் உண்மையை சொன்ன சிவி சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்குவார்களா என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications