விடாது பெய்த மழை..நிரம்பும் ஏரிகள்..புழல்,செம்பரம்பாக்கத்தில் இருந்து நீர் திறப்பு..வெள்ளம் சூழுமா
சென்னை: கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளக்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையானது சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு இருக்கிறது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவள்ளூரில் கனமழை
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 16.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரதான ஏரியான புழல் ஏரிக்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் கனமழை
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகளில் 100 % நிரம்பி உள்ளன.

நீடிக்கும் கனமழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகபெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி முழு கொள்ளளவான 18 அடியை எட்டி தற்போது கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. செங்கல்பட்டில் 528 ஏரிகள் 7 ஏரிகள் 100% நிறைந்துள்ளது. பருவமழை தொடங்கி சில நாட்களுக்கு உள்ளேயே ஏரிகள் நிரம்பி வருவதால் இந்த ஆண்டும் அதிக அளவில் உபரி நீர் வெளியேறி வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிரம்பும் ஏரிகள்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் 5.5 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்ததால் வினாடிக்கு 280 கன அடியாக நீர்வரத்து உள்ளது. புழல் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதால் இன்று மாலை ஏரியில் இருந்து 1000 கடி அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உபரி நீர் வெளியேற்றம்
நீர் வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் இன்று மாலை உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி முதற்கட்டமாக புழல் ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாகவும், செம்பரப்பாக்கம், புழல் ஏரி திறக்கப்பட்டதாலும் பெருவெள்ளம் சூழ்ந்தது. இன்றைய தினம் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வெள்ளம் சூழுமா?
இந்த நிலையில் ஆண்டுதோறும் மழை காலங்களில் படிப்படியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பெருவெள்ள பாதிப்பில் இருந்து சென்னைவாசிகள் தப்பித்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூரில் விடாமல் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications