தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு!
சென்னை ஆர்.ஏ.புரத்தில், வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்தக் கோரி, தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் என்பவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
Recommended Video
இராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்துத் தள்ளும் பணி நேற்று நடைபெற்றது. ராஜிவ் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பசுமைவழிச் சாலையையும், காமராஜர் சாலையையும் இணைக்கும் 40 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் - கால்வாயின் தெற்குக் கரையை ஆக்கிரமித்துள்ள சென்னை -28, ஆர்.ஏ. புரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீசை மக்கள் வாங்க மறுத்த நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பினர். மனுக்கள் தொடர்பாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதற்கு அப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.
256 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் வேறு எங்கும் குடிபெயர்ந்து போக முடியாத கையறு நிலையில் உள்ளனர். வீட்டை விட்டுட்டு எங்க போவது? எங்க பிள்ளைகள் இங்குதான் படிக்கிறார்கள், நாங்கள் அமைதி வழியில்தான் போராடுகிறோம். முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளோம். கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என அப்பகுதியினர் கூறினர்.
நேற்று காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது 65 வயது மதிக்கதக்க கண்ணையா என்ற முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவரைக் காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி வி.ஜி.கண்ணையன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். அதே பகுதியில் அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும் என்றார்.
மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறித்தும், அதில் கண்ணையா என்பவர் தீக்குளித்து இன்று காலையிலே உயிரிழந்திருக்கிறார் என்பது குறித்தும், சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும். மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஒரு இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம்.
அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களோடு, அதைவிட கூடுதல் மனச் சுமையுடனும், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இந்தச் சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்.
இங்கே அமைச்சர் அவர்கள் சொல்கிறபோது, அருகிலேயே, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார்கள். ஏற்கெனவே, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது என்பதையும் தெரிவித்து அமைகிறேன் என்று குறிப்பிட்டார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் என்பவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications