இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலையில் பல ஊர்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் உள்ள 5 முக்கிய அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. கலசப்பாக்கம், மணலூர்பேட்டையில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. தண்டாரம்பேட்டை, மூங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களில் 7 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடி, மதுரை விமான நிலையம், மானம்பூண்டி ஆகிய ஊர்களில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், கோத்தகிரி, கும்பகோணம், திருத்தணி,ஸ்ரீமுஷ்ணம், குழித்துறை, ஊத்தங்கரை, சங்கரி துர்க்கம் ஆகிய ஊர்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், தென்மேற்குப்பருவக்காற்று காரணமாக 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாளையும் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
19 மற்றும் 20ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இன்றைய தினம் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்தது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.