வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியம் திருக்கோவில்.. பக்தர்கள் அவதி
சென்னை : சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியம் திருக்கோவில் மழை நீர் புகுந்துள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த 7 ம் தேதி பெய்த பேய் மழை மற்றும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி பெய்த விடாத மழை காரணமாக சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்து தனி தீவாக காணப்படுகிறது.

இதில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் மிஞ்சவில்லை. தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் முழங்கால் அளவிற்கு மழை நீர் புகுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை என்றாலே கோவில்களுக்கு செல்வது மக்களின் வழக்கம். இந்நிலையில் கோவிலுக்குள் முழங்கால் அளவிற்கு புகுந்த மழை நீரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சிலர் இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
பொதுவாக கோயிலுக்கு வருவது குறைகளை சொல்வதற்கு ஆனால் கோவிலுக்குள்ளே நீர் சூழ்ந்து இவ்வளவு குறைகள் உள்ளது என்பதை யாரிடம் சொல்வது என தெரியவில்லை. கோவிலுக்குள் சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் தெரிவித்தனர்.

அதிக கூட்டம் காணப்படும் இந்த கோவிலை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் கோவிலுக்கு உள்ளும் மழைநீர் புகுந்து உள்ளது. அதிகாரிகளிடமும் கோவில் நிர்வாகத்திடமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதியில் உள்ள நீரை அகற்றினால் மட்டுமே கோவிலுக்குள் உள்ள நீரை அகற்ற முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த மழை நீர் வடிய மேலும் ஒரு நாள் ஆகலாம் என நிர்வாகத் தரப்பில் கூறியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்தால் சிரமமின்றி பூஜைகளும், பக்தர்கள் வருகையும் இருக்கும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications