அடுத்த 3 மணி நேரம்.. மழை இருக்கு! 28 மாவட்டங்களின் “லிஸ்டு” போட்ட வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருவதாகவும், இது அரபிக்கடலில் வழுவிழக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
விழுப்புரம், கடலூர், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
வேலையை காட்டப் போகும் வருண பகவான்! குமரி அருகே 'மழை சக்கரம்’! அலர்ட்டா இருங்க மக்களே! எங்கெங்கே மழை?
காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள தகவலில், "நேற்று (25.12.2022) இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (26.12.2022) காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலும் வலுவிழக்கக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 3 நாட்கள்
நாளை முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருக்கும். வரும் டிசம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் மழை பெய்யும்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சூறாவளிக் காற்று
இன்று லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
வரும் டிசம்பர் 27 ஆம் தேதி லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.