ராஜேந்திரபாலாஜிக்கு அடுத்த செக்.. மதுரை ஆவின் முறைகேட்டில் தொடர்பு?.. விசாரணையில் இறங்கிய போலீஸ்!
சென்னை: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
படிக்கும்போதே தலை சுற்றுதே.. ராஜேந்திரபாலாஜி யார் யாரிடம் எவ்வளவு ஏமாற்றினார்?.. போலீஸ் பட்டியல் இதோ
தலைமறைவான ராஜேந்திரபாலாஜி
ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தேடப்படும் குற்றவாளி
மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் "லுக்-அவுட்" நோட்டீசும் கொடுத்துள்ளார். தொடர்ந்து பலரும் தன்னை ராஜேந்திரபாலாஜி ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார்கள் கொடுத்து வருகின்றனர். அவர் மீது மொத்தம் 7-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி லட்டுக்கு நெய்
இந்த நிலையில் மதுரை ஆவினில் நடந்த முறைகேட்டில் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு இருக்கிறதா என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதாவது திருப்பதி லட்டுக்கு நெய் அனுப்பியதில் மதுரை ஆவினில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக மதுரை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். அப்போது லட்டு தயாரிக்க நெய் அனுப்பியது தொடர்பான விவரங்கள் பதிவேட்டில் இல்லாதது கடந்த மே மாதம் தெரியவந்தது.
Recommended Video
ராஜேந்திரபாலாஜிக்கு அடுத்த செக்
திருப்பதி லட்டுக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து மதுரை ஆவின் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது பல கோடி ரூபாய் மோசடி செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக மதுரை ஆவின் உயர் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கூடிய விரைவில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.