ராமஜெயம் கொலை..துப்பு துலங்கியும் குற்றவாளியை நெருங்க முடியாத சிறப்பு புலனாய்வுக்குழு - என்னாச்சு?
சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலைவழக்கில் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு புதிய துப்பு கிடைத்தும் குற்றவாளியை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளனர்.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படிக் கொல்லப்பட்டார் ராமஜெயம்
ராமஜெயம் கடத்தப்பட்ட பிறகு, டூவீலரின் பிரேக், ஆக்ஸி லேட்டர் கேபிள்களால் கைகால் கட்டப்பட்டு, உடலெங்கும் கட்டுக்கம்பிகளால் கட்டப்பட்டிருந்தது. அவரது உடலெங்கும் குண்டூசிகளால் துளைகள் இட்டபின்னரே, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் ராமஜெயம்.

சிபிசிஐடி விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 10 ஆண்டு காலமாக கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை
சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் என். ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி, சிபிஐ ஆகியவை 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக் கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

புதிய துப்பு துலங்கியது
அதன்படி தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தது. அப்போது, புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் வெகுமதி
இவ்வழக்கை தப்பு துலக்க சரியான தகவலை தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்றாலும் இதுவரை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால், அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி டீக்காராமன், 4 கால வார அவகாசம் வழங்கி வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

10 ஆண்டுகால புதிருக்கு விடை கிடைக்குமா?
ராமஜெயம் கொலையைப் பொறுத்தவரை கொலையின் சூத்ரதாரியை நெருங்கிவிட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஆனால், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், இதனால்தான் கொலை நிகழ்ந்தது, இன்னார்தான் கொலையாளிகள் என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. யார் கொலை செய்தது எதற்காக கொலை நிகழ்ந்து என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே ராமஜெயம் கொலை வழக்கில் 10 ஆண்டுகால புதிருக்கு விடை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications