சவுத்ல அடுத்த ’ஓபிஎஸ்’ நான்தான்! மாஸ் ப்ளான் போடும் சிஷ்யர் ஆர்பி.உதயகுமார்! எடப்பாடிக்கு இப்படியா?
சென்னை : ஜெயலலிதா காலத்தில் எப்படி ஓ.பன்னீர்செல்வம் இருந்தாரோ அதேபோல எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் தென் மாவட்டங்களில் தான் செல்வாக்கு மிக்க தளபதியாக உருவாக வேண்டும் என ஆர்பி உதயகுமார் நினைப்பதாகவும் இதற்காகவே எடப்பாடிக்கு விசுவாசத்தை காட்டி வருவதாக கூறுகின்றனர் மதுரை ர.ர.க்கள்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே அதிகார மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றதற்குப் பிறகாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
பாறையில் நட்ட மரம்! ரூ.50 லட்சம் அபேஸ் புகார்.. அதிமுக 'மாஜி’ திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம்!
ஆர்பி உதயகுமார்
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக செய்து வரும் நிலையில், ஆர்பி உதயகுமார் மாஸ் காட்ட திட்டம் தீட்டி வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றினை அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ளார். அதில், "கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பாண்டிய மண்டலத்தில் நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
அதனை தொடர்ந்து நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்,அதனைத் தொடர்ந்து திருமங்கலம் வழியாக சிவகாசி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனையொட்டி திருமங்கலம் மேலக்கோட்டை அருகே உள்ள கரிசல்பட்டியில் இருந்து சிவரக்கோட்டை, கள்ளிக்குடி வரை மதுரை மாவட்டத்தில் பல்வேறு சாதனை திட்டங்களை வாரி வழங்கிய எடப்பாடியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கழக அம்மா பேரவை சார்பில் மாபெரும் எழுச்சி மிக்க நன்றி அறிவிப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்
இதில் கழகத் தொண்டர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள், ஆகியோர் பங்கேற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் அமையும் வண்ணம் இந்த வரவேற்பு அமைய உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகாசி இருந்து புறப்பட்டு மாலையில் மதுரை மாநகர் ,மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்கிறார், அங்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும், கழக அம்மா பேரவை சார்பிலும் கழகத் தொண்டர்களும் பெருந்துள்ளாக பங்கேற்கின்றனர்" என கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஓபிஎஸ்!
அதிமுகவை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் திண்டுக்கல் தொடங்கி கன்னியாகுமரி வரை பல மூத்த முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலர் இருந்த போதிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் அவர் சமூகத்தைச் சார்ந்த ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதை அடுத்து எடப்பாடியின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார் ஆர்பி உதயகுமார்.
கலக்கத்தில் மாஜிக்கள்
ஜெயலலிதா காலத்தில் எப்படி ஓ.பன்னீர்செல்வம் இருந்தாரோ அதேபோல எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் தென் மாவட்டங்களில் தான் செல்வாக்கு மிக்க தளபதியாக உருவாக வேண்டும் என ஆர்பி உதயகுமார் நினைப்பதாகவும் இதற்காகவே எடப்பாடிக்கு விசுவாசத்தை காட்டி வருவதோடு பன்னீர்செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் தான் தேனியில் ஆர்பி உதயகுமார் நடத்திக் காட்டிய ஆர்ப்பாட்டம் என்கின்ற அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஆர்பி உதயகுமார் அதிரடி செயல்பாடுகள் காரணமாக சில மூத்த முன்னணி முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருந்தாலும் தற்போதைக்கு எடப்பாடி தரப்பில் ஆர்பி உதயகுமார் தான் செல்வாக்கு மிக்க நபராக இருப்பதால் வேறு வழியின்றி அவரை அனுசரித்துச் செல்கின்றனர் என்கின்றனர் விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.