14 கோடி தப்பியது.. ஆர்சிபி ஹேப்பி.. 13 மேட்ச்சுக்கு பிறகு ஒரு சிக்ஸ்.. "100 மீட்டர்" வாவ் மேக்ஸ்வெல்
சென்னை: 14.2 கோடி பணம் கொடுத்து தன் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நம்பிக்கை ஒளியை, டார்ச் அடித்து முதல் போட்டியிலேயே பாய்ச்சிவிட்டார் கிளன் மேக்ஸ்வெல்.
உலகின் தலைசிறந்த ஹிட்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கிளன் மேக்ஸ்வெல். ஆரம்பத்தில் பஞ்சாப் அணிக்காக நன்றாகத்தான் விளையாடி வந்தார் . அவர் களத்தில் நின்றாலே எதிரணியினருக்கு கிலி பிடித்து விடும்.
வாக்குப்பதிவு மையத்தில்.... திடீர் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. மே வங்கத்தில் பதற்றம்
வழக்கமான பொசிஷன் என்பதை மாற்றிக்கொண்டு, ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகள் அடிப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு இவர் பெரும் தலைவலியாக மாறியிருந்தார்.
ரிவர்ஸ் ஷாட் கிங்
ஸ்பின் பந்துகளை மட்டுமல்லாது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் வேகப் பந்துகளையும் அனாயசமாக ரிவர்ஸ்ஸ் ஷாட் அடிப்பதில் கில்லாடி கிளன் மேக்ஸ்வெல். இதுதான் அவரது தனித்துவம். ஆனால், கிளன் மேக்ஸ்வெல்லுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. கடந்த ஐபிஎல் தொடர் முழுக்க மிகப்பெரிய சொதப்பலாக மாறிவிட்டார்.
பஞ்சாப்புக்குதான் பயம்
இவர் களத்தில் நிற்பது எதிரணிக்கு பயத்தை உண்டு பண்ணாமல் பஞ்சாப் அணிக்குதான் பயத்தை ஏற்படுத்தியது. அதிகப்படியான பந்துகளை சந்தித்து விட்டு குறைந்த ரன்களில் நடையை கட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு ஆடும்போதும் பிற தொடர்களில் ஆடும்போதும் சிறப்பாக பேட்டிங் செய்த மேக்ஸ்வெல், பஞ்சாப் அணிக்காக கடந்த இரு தொடர்களிலும் சிறப்பாக விளையாடவில்லை.
13 போட்டிகளில் 108 ரன்கள்
பஞ்சாப் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் 13 மேட்சுகளில் பங்கேற்ற மேக்ஸ்வெல் அடித்தது வெறும் 108 ரன்கள் தான். இதற்கு அவர் சந்தித்த பந்துகள் 106. ஆம்.. கிட்டத்தட்ட ஒருநாள் போட்டி அல்லது டெஸ்ட் போட்டி போலத்தான் அவர் ஐபிஎல் 20-20 போட்டி தொடரை விளையாடியுள்ளார்.
ஒரு சிக்சர் இல்லை
13 போட்டிகளில் ஒரு சிக்சர் கூட அவர் அடிக்கவில்லை என்பது மிகவும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. புஜாரா சிக்சர் அடிக்காவிட்டால் பரவாயில்லை, மிகச்சிறந்த ஹிட்டர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.. அதுவும் ஐபிஎல் போன்ற, பேட்டிங்கின் சொர்க்கபுரியாக உள்ள ஒரு போட்டி தொடரில் இதை கூட அவர் செய்யவில்லை என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்தனர்.
பெரிய தொகை
இந்த நிலையில்தான் நடப்பாண்டில் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரூ.14.25 கோடி ரூபாய் கொடுத்து கிளன் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி வாங்கியது. 13 போட்டிகளில் சொதப்பிய ஒரு வீரருக்கு இத்தனை கோடி ஏன் வாரி வழங்கப்பட்டது.. இதற்கு பதிலாக அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்தால் வட்டி தொகையே அதிகமாக வரும் என்று கிண்டல் செய்தனர் ரசிகர்கள்.
100 மீட்டர் சிக்ஸ்
ஆனால் நேற்று மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு, கிளன் மேக்ஸ்வெல் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஒரு முக்கியகாரணம். 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். இத்தனை நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு அவர் நேற்றைய போட்டியில் சிக்சர் அடித்தார் என்பது தான் இதில் ஹைலைட். அதுவும் ஏதோ லேசுப்பட்ட ஷாட் கிடையாது. 100 மீட்டர் தொலைவிற்கு சென்று விழுந்தது அந்த பந்து என்றால் இத்தனை நாட்களும் சேர்த்து வைத்த மொத்த வெறியையும் அவர் அந்த ஷாட்டில் காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
வாவ் சிக்ஸ்
குர்னால் பாண்டியா வீசிய 11-வது ஓவரில் இந்த ஷாட்டை விளாசினார் கிளன் மேக்ஸ்வெல். அடித்த பந்து மைதானத்தின் கூரைக்கு மேலே சென்று விழுந்து விட்டது. பிறகு அதை எடுத்து வருவதற்குள் பெரும்பாடுபட்டனர் மைதான ஊழியர்கள். அப்போது எதிர் முனையில் நின்று கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி "வாவ்" என்று வாயை குவித்து செய்த சைகை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது.
ஆர்சிபி ரசிகர்கள் ஹேப்பி
நேற்றைய போட்டியில் சிக்ஸர் அடித்தது மட்டுமல்லாது, கணிசமான ரன்களை குவித்து வெற்றிக்கு உதவியது மட்டுமல்லாது, அவரது ஷாட்டுகள் அனைத்துமே பேட்டின் நடுப்பகுதியில் பட்டு சென்றன. இது ஒரு நல்ல அறிகுறி என்று பூரித்துப் போய் இருக்கிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள். கிளன் மேக்ஸ்வெல் எதையுமே வித்தியாசமாக ஆட முயலவில்லை. அதாவது பக்கவாட்டு ஷாட்கள் அடிக்க முனையவில்லை. பந்து எந்த திசையில் செல்கிறதோ அதே திசையில் அடித்தார். அவருக்கு இயல்பாக வரக்கூடிய ரிவர்ஸ் ஷாட்டுகளையும் அடித்தார். பந்தின் குறுக்கே பேட்டை சுழற்றி, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
நல்ல பேட்டிங்
2வது பேட்டிங் என்பதால், மைதானத்தில் பந்துகள் சற்று மெல்ல எழும்பி வந்ததது. வேகமாக அடிக்க முற்பட்டு பந்து அதை விட மெதுவாக பேட்டில் பந்து பட்டதால் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கிளன் மேக்ஸ்வெல். எனவே மோசமான ஷாட் விளையாடி அவர் அவுட்டானதாக கூறமுடியாது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். இது அனைத்துமே பெங்களூர் அணியின் ஒரு நல்ல தொடக்கத்துக்கான அறிகுறி என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள் ரசிகர்கள்.