தலைமை செயலர் முதல் எஸ்பிக்கள் வரை..ஒரே மாதத்தில் எல்லா அதிகாரிகளும் மாற்றப்பட்டது ஏன்? பின்னணி என்ன
சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே, தலைமைச் செயலாளர், சட்ட ஒழுங்கு டிஜிபி தொடங்கி அனைத்து மாவட்ட எஸ்பிகள் வரை முக்கிய ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகக் கடந்த மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
திமுக ஆட்சி
முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றது முதலே ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ஸ்டாலின் முதல்வரான சமயத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தது. அதைத் தொடர்ந்து மாநில அரசு எடுத்த பல முக்கிய நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் ஒரே மாதத்தில் கட்டுக்குள் வந்தது. மாநிலத்தில் இந்தளவுக்கு கொரோனா கட்டுக்குள் வந்ததற்கு ஆட்சியாளருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு அந்த உத்தரவுகளைச் செயல்படுத்தி அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது.
தலைமைச் செயலாளர் மாற்றம்
பொதுவாகவே, ஒரு அரசு சிறப்பாக நடைபெற அமைச்சரவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதிகாரிகளும் முக்கியம். இதை உணர்ந்திருந்ததாலேயே தேடிப்பிடித்து மிகச் சிறந்த அதிகாரிகளைத் தனது செயலாளர்களாக முதல் நாளே நியமித்துக் கொண்டார். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற அன்றே தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டார். ராஜிவ் ரஞ்சனுக்கு பதிலாக வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
முக்கிய அதிகாரிகள் மாற்றம்
அதேபோல முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். மேலும், முதல்வரின் தனிச் செயலாளர்களாக உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் காவல்துறையிலும் பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு காவல்துறை உளவுத் துறை ஏடிஜிபியாக எஸ். டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை நகரக் காவல் துறை ஆணையராக ஷங்கர் ஜிவால், தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர்கள்
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் வலம் வந்த பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராகத் தூக்கியடிக்கப்பட்டார். அதேபோல அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை செயலாளராகவும் பின்னர் வணிக வரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராகவும் இருந்து வந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் நெசவு துறைக்கான முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். இது தொடங்கிப் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
எஸ்பிகள் வரை இடமாற்றம்
தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் எஸ்பிகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் மறுபுறம் நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இப்படி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது ஏன் என்ற கேள்வியும் பலரும்கூட எழுந்திருக்கும்.
காரணம் என்ன
கடந்த ஆட்சியில் 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பெரியளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் மேற்கு மண்டல ஐஜி, எஸ்பிகள், டிஐஜி ஆகியோர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் தான் பணியாற்றி வந்தனர், இதனால் அவர்களுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் நல்ல ஒரு இணக்கமான பரிதல் இருந்து வந்தது. இது திமுக ஆட்சிக்குத் தேவையற்ற சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் எனத் தலைமை கருதியது. இதன் காரணமாகவே அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதிய நடைமுறை இல்லை
மேலும், புதிதாக ஆட்சி அமைந்ததும் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கடந்த 2006, 2011ஆம் ஆண்டுகளிலும் இதே தான் நடந்தது. குறிப்பாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அனைவரும் ஒரே வாரத்தில் மாற்றப்பட்டது நினைவிருக்கும். கடந்த காலங்களில் நடந்ததைப் போலவே இப்போதும் பணியிடமாற்றம் நடந்துள்ளன.
சரியான நடவடிக்கை
இதைச் சிலர் விமர்சித்தாலும், மற்றொரு தரப்பினர் இது சரியான நடவடிக்கை என்றே கூறுகின்றனர். அரசின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. அதன்படி ஒரு அரசு நடைபெறும்போது, அவர்களின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் களத்திலிருந்தால் தான் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு சிறு பிரச்சினை என்றாலும்கூட அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயல்படும் அதிகாரிகள் களத்தில் தேவை. இதைக் கருத்தில் கொண்டே அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.