"வருமானம் கூடுதலா வருதுனு நினைக்காதீங்க.. இதையெல்லாம் கொடுத்தே ஆகணும்” - பளிச்சுனு சொன்ன தினகரன்!
சென்னை: மூத்த குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், முதியோருக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அரசை, ஆளுநர் மதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திய பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு: டிடிவி தினகரன் அதிரடி
மூத்த குடிமக்கள்
கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் இதுவரை வழங்கப்படவில்லை.
கூடுதல் வருமானம்
இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் மார்ச் 2020 முதல் மார்ச் 31, 2022 வரை ரயில்களில் பயணித்த 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே அளிக்கவில்லை. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ததால் ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சரியானது அல்ல
இந்நிலையில், ரயில் கட்டணத்தில் முதியோருக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கக்கோரி டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மூத்த குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இந்தக் கட்டணச் சலுகை, இயல்பு நிலை திரும்பி மீண்டும் ரயில்கள் ஓடத் தொடங்கி மாதக் கணக்கில் ஆனபிறகும் மூத்த குடிமக்களுக்கு திரும்ப அளிக்கப்படாதது சரியானதல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
மேலும் அவர், "மூத்த குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடுதான் நன்றி மிகுந்தவர்கள் இருக்கிற தேசமாக திகழ முடியும். முதியோர்களுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.