அடுத்தடுத்து கசியும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்..2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை
சென்னை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான காலம் ஆன்லைன் வழியாகவே பள்ளிகள் நடத்தப்பட்டது. இடையில் சில காலம் பள்ளி திறக்கப்பட்ட போதிலும், டெல்டா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாகப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் கல்வியில் பாகுபாடு இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறிய நிலையில், இந்தாண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில், சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற அறிவியல் தேர்வு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே இணையத்தில் வெளியானதாகக் கூறப்பட்டது. அதேபோல 12ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன் கூட்டியே வெளியாகியுள்ளது.

வழக்கமாகத் திருப்புதல் தேர்வுகள் வினாத்தாள்கள் சில மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். அப்போது சில பள்ளிகள் மூலம் வினாத்தாள்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து 10, +2 தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக அந்த 2 தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications