தமிழக ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி.. யார் இவர்? அறிய வேண்டிய உண்மைகள்
சென்னை: தமிழகத்தின் 25வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார் . அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி சஞ்சீப் பானர்ஜி பிரமாணம் செய்து வைத்தார்,
Recommended Video
கொரோனா காலக்கட்டம் என்பதால் ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 500நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

யார் இவர்
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். குடியரசு தலைவர் அவரை பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஐபிஎஸ் அதிகாரி
ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பட்டப்படிப்பு முடித்த பின் ஆரம்ப காலங்களில் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் தேர்வு பெற்று கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி உளவுத்துறையில் பணியாற்றினார். 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 2014-ல் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், பிரதமர் அலுவலகக் கூட்டு உளவுக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிறகு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆனார்.

என்ன பொறுப்பு
இந்திய அரசின் சார்பில் நாகாலாந்திலுள்ள பிரிவினைவாத அமைப்புகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் அழுத்தம் காரணமாக, பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் பொறுப்பு ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டது.இதையடுத்து 2015-ம் ஆண்டு என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதற்குக் காரணமான ரவி, அப்போது பெரிதும் பாராட்டப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் .

பேச்சுவார்த்தை
ஆளுநரானவுடன் தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தார் ரவி. இதனிடையே என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன் மோதல் ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நாகாலாந்தில் செயல்படும் ஏழு தீவிரவாத இயக்கங்களை ஒருங்கிணைத்து, நாகா தேசிய அரசியல் குழு' என்ற ஒன்றை உருவாக்கச் செய்து, அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். ஆனால் பெரிய குழுவான என்.எஸ்.சி.என் (ஐ.எம்)யை புறக்கணித்தாக கூறப்படுகிறது. அவர் நாகாலாந்திலிருந்து மாற்றப்பட்டால் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும்' என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

பத்திரிக்கையாளர்கள்
இதற்கிடையே நாகாலாந்து முதல்வர் நெப்யூ ரியோவுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அவரும் கொதித்து போய் பா.ஜ.க தலைமைக்கு பிரச்சனையை கொண்டுசென்றார் . ஒரு கட்டத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் வேறு வழியில்லாமல் மத்திய அரசு அவரை தமிழகத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது . இதனிடையே ஆளுநர் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்தது இல்லை ன்று கூறி ஆளுநரை வழியனுப்பும் விழாவை கூட அங்கு உள்ள பத்திரிக்கைகள் புறக்கணித்தன. இது தொடர்பாக விவாதங்களும் எழுந்தன.

பதவி பிரமாணம்
தமிழக ஆளுநராக ரவி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இரண்டு நாளைக்கு முன்பு நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு ஆளுநர் ரவி வருகை தந்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். இந்நிலையில் தமிழகத்தின் 25வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார் . அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications