2.50 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க ரூ 2,000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் செம்ம அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2.50 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க ரூ2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பேரவைத் தலைவர் அவர்களே, அதேபோல், நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின்கீழ் அரசாணை வெளியிடப்பட்டதா? நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்ற விவரங்களை கேட்டிருக்கிறார்கள்.

எம்.எல்.ஏக்கள் கோரிக்கைகள்: சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அனுப்பி வைக்குமாறு, நான் கடந்த 22-08-2022 அன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் பெறப்பட்ட பணிகள் 07-10-2023 அன்று எனது தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.
எத்தனை பணிகள் நடைபெறுகின்றன?: நடப்பாண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 797 பணிகள், 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, அதில் 582 பணிகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் 63 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உள்ள பணிகளுக்கு உரிய ஆணைகள் வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி தொகுதியில் 3 கோரிக்கைகள்: எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இத்திட்டத்தின்கீழ் அளித்திருக்கக்கூடிய அவர் தொகுதியின் கோரிக்கைகளில், ஐந்து கோரிக்கைகள் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் மூன்றுக்கு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு அதில் ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இரண்டு பணிகளுக்கு அரசாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அரசு "சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்" என்பதனை பேரவைத் தலைவர் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஜவாஹிருல்லா கோரிக்கை: பேரவைத் தலைவர் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்கள் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும் என ஒரு நீண்டகால கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு பேராசிரியர் திரு. ஜவாஹிருல்லா அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆவன செய்யப்படும் என்பதையும் பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வீடுகள் பரமாரிப்புக்கு ரூ2,000 கோடி: பேரவைத் தலைவர் அவர்களே, இந்த பதிலுரையில் முக்கியமான ஒரு அறிவிப்பையும் இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெல்க தமிழ்நாடு: உங்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு தங்களது திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன். "வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!". இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications