மேகதாது.. மத்திய அரசை அலற விட்டிருக்க வேண்டாமா அதிமுக?
Recommended Video
சென்னை: காவிரி என்பது வெறும் நதி நீர் மட்டும் கிடையாது. அது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் ஜீவாதாரம். அவர்களின் உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் குடும்பத்தில் ஒரு அங்கம் போல இருப்பவள்தான், காவிரி.
அப்படியான காவிரி நதி நீர், தமிழகத்துக்கு வருவதற்கு மாபெரும் படை ஒன்று உருவாகியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதன் மூலம், மழைகாலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பியது போக எஞ்சிய தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலைமையும் தடைபட்டு, தமிழகம் பாலைவனமாகும் சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படியான மாபெரும் ஒரு செயற்கை பேரிடர் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து இன்று திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளது. முன்னதாக தனது தோழமைக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது.
என்ன செய்தது அரசு
ஆனால் தமிழர் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பு வகிக்கும் மாநில அரசு என்ன செய்தது இதுவரையில்? மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமலும், மத்திய அரசுக்கு எதிராக வலுவாக எதுவும் பேசாமலும் அமைதியாக உள்ளது.
மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், மேகதாது அணை ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது கடமையை முடித்துக் கொண்டுள்ளது தமிழக அரசு.
அரசியல் அழுத்தம் இல்லையே ஏன்
எந்த அரசாங்கம் இருந்தாலும், வழக்கு தொடருவது என்பது, செய்யக் கூடிய நடவடிக்கைதான். ஆனால், 50 எம்.பிக்களை தன்வசம் வைத்துக் கொண்டுள்ள இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என்று மார்தட்ட கூடிய அதிமுக என்ன செய்கிறது? என்பதே முக்கிய கேள்வி. மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் தங்கள் மாநிலத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீரை பயன்படுத்தலாம் என்ற பேராசை கர்நாடகாவிற்கு இருக்கிறது. இது நியாயத்திற்கு அப்பாற்பட்டது என்றபோதிலும் தங்கள் மாநில நலன் என்ற அளவில், கர்நாடக அரசும், அதன் கட்சிகளும் ஓரணியில் நிற்பதில் ஒரு தர்க்க நியாயம் உள்ளது.
பச்சை துரோகம்
ஆனால் நடுநிலையாக செயல்பட வேண்டிய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு, மேகதாது அணையை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வு பணிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசியல் சாசனப்படி நடக்க வேண்டிய ஒரு மத்திய அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மேகதாது அணைக்கு அனுமதி வழங்கி இருப்பது என்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம். அதன் பின்னணி ஆராயப்பட கூடியது.
கர்நாடகா பேராசை
கர்நாடகா தனது நலனுக்காக பேராசையுடன் செயல்படுகிறது என்பதால் அதை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்து விடலாம். நடுநிலையோடு இருக்க வேண்டிய மத்திய அரசும், தமிழக நலனுக்காக செயல்பட வேண்டிய தமிழக மாநில அரசும் ஏன் மேகதாது அணைக்கு எதிராக வலுவாக செயல்படவில்லை என்பதுதான் விடை தேடவேண்டிய அதி முக்கிய வினா.
எங்கே போராட்டம்
லோக்சபா தேர்தல் நெருங்கி வரக்கூடிய இந்த சூழ்நிலையில் 50 எம்பிகளை வைத்துள்ள அதிமுக, மேகதாது பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பிற கட்சிகளின் ஆதரவை பெற முயலலாம். வெற்றியடைகிறதோ, தோல்வியோ, இதன் மூலம் மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் அச்சத்தை உருவாக்கலாம். குறைந்தபட்சம் டெல்லியில் அதிமுக எம்பிக்கள் இந்த நேரம் காந்தி சிலை முன்பு அமர்ந்து போராடி இருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லையே. கிணற்றில் போட்ட கல் போல ஆளுங்கட்சி செயல்படுவது பெரும் துரதிருஷ்டவசமானது.
இந்தியாவிற்கே தெரிந்திருக்கும்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது என்ற விஷயத்தை முன்னிறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி இருந்தால், மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்ற செய்தி இந்தியா முழுக்க சென்று சேர்ந்து இருக்கும். தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய அரசின் இரட்டை வேடத்தில் மற்றொன்று அம்பலமாகியிருக்கும். ஆனால், இவ்வாறு அம்பலப்படுத்துவதற்கு ஏன் அதிமுகவிற்கு அக்கறை இல்லை?
நீட் நிலை
நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தன. ஆனால், அதுபோன்ற எந்த விலக்கையும் மத்திய அரசு அளிக்கவில்லை. எட்டு கோடி தமிழக மக்களும் இணைந்து நின்று எங்களுக்கு நீட் வேண்டாம் என்று கூறியதுதான் தமிழக சட்டசபை தீர்மானத்திற்கான பொருள். ஆனால் 8 கோடி மக்களின் இந்த ஒருமித்த கோரிக்கையை காலில் போட்டு மிதித்து விட்டது மத்திய அரசு.
மக்கள் கவனிக்கிறார்கள்
நீட் தேர்வுக்கான தமிழக சட்டசபை தீர்மானம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று எகத்தாளமாக கூறினார் மத்திய அமைச்சர் ஒருவர். நீட் தேர்வை நடத்தி தமிழக மாணவர்கள், மாணவிகள் பலரின் மருத்துவ கனவு கலைந்து போகச் செய்துள்ளது மத்திய அரசு. அப்போதும் வாய்மூடி மௌனமாக தான் இருந்தது தமிழக அரசு. இப்போதும் மேகதாது விஷயத்தில் அதைத்தான் செய்து கொண்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக மக்கள் தங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு உள்ளார்கள், என்பதை மனதில் வைத்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது வலுவான கண்டனங்களையும் நடவடிக்கைகளையும் அதிமுக தொடங்குவதுதான் அந்த கட்சிக்கு நல்லது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.