அதிமுகவில் ஜாதி? ஜாதி பார்த்தா முதல்வர் பதவி? ஜாதி சங்கம் நடத்துங்க... இபிஎஸ் மீது சசிகலா பாய்ச்சல்!
சென்னை: அதிமுகவில் ஜாதி அரசியல் நடக்கிறது; நான் ஜாதியைப் பார்த்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியை தந்திருப்பேனா? ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி இருக்கமாட்டேன் என சசிகலா கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தமது ஆதரவாளர்களை சசிகலா இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தொடர்ந்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார் சசிகலா. லோக்சபா தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் முதல் முறையாக ஆதரவாளர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது: அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கியது ஏழை மக்களுக்காக. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் துன்பங்களை அனுபவித்து அதிமுகவை கட்டிக் காத்தனர். இன்றைக்கு அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்திக்கிறது. இதற்கு ஒரு சில சுயநலவாதிகள், இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு இழுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

ஜாதி பார்த்தவர்கள் இல்லை: இதனை நானும் இத்தனை காலம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என எம்ஜிஆர் அடிக்கடி சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் என்னிடம் அரசியல் விவகாரங்களை பேசியிருக்கிறார். ஜெயலலிதா உயர்ஜாதியைச் சேர்ந்தவர் என்னிடம் பழகியே இருக்க முடியாது. எனக்கு குறிப்பிட்ட ஜாதிதான் சொந்தம் இல்லை. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்து பழகியவர் இல்லை.

திமுகவும் வாரிசு அரசியலும்: அதிமுகவில் 2 விஷயங்கள் எப்போதும் கிடையாது. திமுகவில் அந்த 2 விஷயம் இருக்கிறது. திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது. அங்க அது தலைதூக்கி ஆடும். நம்ம அதிமுகவில் அது எல்லாம் கிடையவே கிடையாது. ஒரு சாதாரண ஏழை கூட எம்.எல்.ஏ, எம்பி ஆகலாம். இது எல்லாம் அதிமுகவுக்கான முறைகள். திமுகவில் அப்படி எல்லாம் இல்லை. திமுகவில் எல்லோரும் உழைக்கனும்.. எல்லோரிடத்திலும் வேலைவாங்குவார்கள். ஆனால் அவங்க அவங்க குடும்பத்தில் உள்ள வாரிசுகளை அப்படியே கொண்டு வந்துவிடுவார்கள். மற்றவர்கள் எல்லாம் தேர்தல் வேலை செய்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். அதிமுக அப்படி இல்லை.

அதிமுகவில் ஜாதி அரசியல் செய்வதா?: ஆனால் அதிமுகவில் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதின்னு நினைச்சு ஜாதி அரசியலுக்குள் போகிறார்கள். நிறையபேர் ஜாதி அமைப்புகள் வைத்து நடத்துகின்றனர். அப்படி ஆசைப்பட்டால் அப்படி ஜாதி அமைப்புகளை நடத்தலாம். ஆனால் எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம், ஜெயலலிதா வளர்த்த இயக்கம். இந்த இயக்கத்தில் ஜாதி அரசியல் செய்வதை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுக தொண்டர்களோ, நானோ பொறுத்துக் கொள்ள முடியாது.

எடப்பாடிக்கு முதல்வர் பதவி ஏன்?: நான் அப்படி எல்லாம் ஜாதி பார்த்திருந்தால் நான் ஏன் பெங்களூர் போகிறபோது உங்களிடம் (எடப்பாடி பழனிசாமி) முதல்வர் பதவியை கொடுத்துவிட்டுப் போகிறேன்? நான் ஜாதி பார்த்திருந்தால் அப்படி செய்திருப்பேனா? நான் ஜாதி பார்க்கலை. மேற்கு மாவட்ட மக்கள் தொடர்ந்து எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ஆதரவு தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்றுதான் செய்தேன். இவ்வாறு சசிகலா கூறினார்.













Click it and Unblock the Notifications