டிவி சேனல்களில் அனல் பறக்கும் பேட்டி கொடுக்க தயாராகும் சசிகலா... இனி பரபரப்புக்கு பஞ்சமில்லை
சசிகலா டிவி சேனல்களில் பேட்டி கொடுக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆடியோ பரபரப்பு இன்னமும் அடங்காத நிலையில் டிவி சேனல்களில் கொடுக்கும் பேட்டிகள் மூலம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தப்போகிறார்.
சென்னை: அதிமுகவினரிடம் பேசி தினம் தினம் ஆடியோ வெளியிட்டு வருகிறார் சசிகலா. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடுத்தடுத்து நீக்கி வருகிறது அதிமுக தலைமை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறார் சசிகலா. சசிகலாவின் பேட்டிகளால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரானார் சசிகலா. முதல்வராக ஆசைப்பட்டு காய் நகர்த்தினார். அவரது கெட்ட நேரம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசம் முடிந்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன சசிகலாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து ஓய்விற்குப் பிறகு பிப்ரவரி மாதம்தான் சென்னை திரும்பினார். பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் உற்சாகமாக பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார்.
சசிகலா அறிக்கை
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலை விட்டு விலகப்போவதாக அறிக்கை விட்டு ஒதுங்கிய சசிகலா, ஆன்மீகப்பயணம் கிளம்பினார். குல தெய்வ கோவில் தொடங்கி திருவிடைமருதூர், திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் என ஊர் ஊராக சென்று யாகம் வளர்த்து சாமி தரிசனம் செய்தார் சசிகலா.
ஆடியோ ரிலீஸ்
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. அது பற்றி எந்த வித கருத்தும் கூறாமல் இருந்த சசிகலா, கடந்த ஒரு மாத காலமாக அதிமுக, அமமுகவினரிடம் பேசி வருகிறார். இந்த ஆடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சசிகலா போஸ்டர்
சசிகலாவுடன் செல்போனில் பேசியவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர். சசிகலாவுக்கு எதிராக மாவட்டம் தோறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் தினசரியும் ஆடியோ ரிலீஸ் ஆவது மட்டும் நிற்கவில்லை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றன.
சசிகலா தயார்
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மாவட்டந்தோறும் வந்து மக்களை சந்திப்பேன் என்று கூறி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக பிரபல டிவி சேனல்களில் பரபரப்பாக பேட்டி தர தயாராகி வருகிறாராம் சசிகலா.
சசிகலா நெருக்கடி
தினம் தினம் ஆடியோ ரிலீஸ் செய்து வரும் சசிகலா தனது நேரடி பேட்டிகளால் அதிமுக தலைமைக்கு என்ன மாதிரியான நெருக்கடிகளை தரப்போகிறார் என்று தெரியவில்லை. சசிகலாவின் பேட்டிகள் ஒளிபரப்பாகும் பட்சத்தில் அதிமுகவில் நிலவரம் கலவரமாக வாய்ப்புள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன.