'அவர்களுக்காக' தான் அரசியலில் இருந்து ஒதுங்கினேன்.. சிறையிலேயே விரதமும் இருந்தேன்.. சசிகலா ஆடியோ
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக சிறையிலிருந்த போதும் பூஜை செய்து மாதக் கணக்கில் விரதம் இருந்ததாகப் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த 4 ஆண்டுகளாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சசிகலா, ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். தேர்தலில் சசிகலா ஃபேக்டர் முக்கிய பங்கு வகிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதாகக் கூறி அப்போது அனைத்திற்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார். அப்போதும்கூட ஆன்மீக சுற்றுலா சென்று, ஆக்டிவாகவே இருந்தார்.

சசிகலா ஆடியோ
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாததால், அடுத்தகட்டமாகக் கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார். அதிமுக தொண்டர்கள் தொடங்கி முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் வரை, சசிகலாவுடன் உரையாடும் வீடியோ நாள்தோறும் வெளியாகி வருகிறது. முதலில் அமமுகவினருடன் மட்டுமே பேசுவதாகவும் அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை என மறுத்தனர்.

அதிமுக ஸ்டிரிட்
இருப்பினும், இது தொடர்ந்ததால், அதிமுகவிலிருந்து 15க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டனர். அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் கட்டாயம் தொடர்பில் இருக்கக் கூடாது எனப் பலரிடமும் அக்கட்சியின் தலைமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலரும்கூட சசிகலாவுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

எதுவும் நிறுத்துவதில்லை
ஆனால் இதையெல்லாம் சசிகலா தரப்பு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றே தெரிகிறது. அவருடன் பேசும் தொண்டர்களின் எண்ணிக்கையும் சரி, சசிகலாவின் ஆடியோக்களும் சரி தினடரி வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இதனைத் தடுக்க அதிமுக தலைமை பல நடவடிக்கை எடுத்தாலும்கூட, எதுவும் அதை தடுத்து நிறுத்துவதாக்கத் தெரியவில்லை.

புதிய ஆடியோ
இந்நிலையில், நேற்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற அதிமுக தொண்டருடன் சசிகலாவின் டெலிபோன் உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் பேசும் சசிகலா, "கட்சி இப்படி வீணாவதை பார்த்துக் கொண்டு இனியும் சும்மா இருக்க முடியாது. கட்சி மிக மோசமான நிலைக்குச் செல்கிறது. அதைச் சரி செய்தே ஆக வேண்டும். நான் இருக்கும் வரை அதைச் செய்வேன்.

ஏன் ஒதுங்கினேன்
சட்டசபைத் தேர்தலில் சொன்னபடி அவர்கள் ஜெயிப்பார்கள் என்பதற்காகத் தான் நான் ஒதுங்கினேன். அப்படி அவர்கள் வென்றிருந்தால் மாநிலத்தில் 3ஆவது முறையாக ஜெயலலிதா ஆட்சி வந்திருக்கும். இதுமட்டுமில்லை என்னுடன் பேசும் தொண்டர்களைக்கூடக் கட்சியிலிருந்து நீக்குகிறார்கள்.

பூஜை செய்து, விரதம் இருந்தேன்
நான் பெங்களூரு சிறையில் இருந்த போதிலும், என் உடல் மட்டும் தான் அங்கு இருந்தது, என் உயிர் தமிழ்நாட்டு மக்களைச் சுற்றியே இருந்தது. நான் சிறையில் இருந்த காலத்திலும்கூட, தமிழ்நாட்டு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் செய்யாத பூஜைகளே இல்லை. பல மாதங்கள் விரதமும் இருந்தேன்" என்று பேசுகிறார். இந்த ஆடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக குற்றச்சாட்டு
இருப்பினும், அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் தான் சசிகலா பேசுவதாகவும் அதிமுகவை அபகரிக்க முயல்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். மேலும், சசிகலாவுடன் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிமுக தலைமையின் இந்த முடிவு சசிகலாவை எத்தனை காலம் கட்டுப்படுத்தும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications