அன்று மதுசூதனன்.. இன்று ஓபிஎஸ் மனைவி.. துக்க நிகழ்ச்சிகளில் சசிகலா.. அதிமுகவுடன் தொடர்ந்து நெருக்கம்
சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி ஆகியோரின் இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சசிகலா அதிமுகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார்.
Recommended Video
முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 10 நாட்களாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உடல்நலம் தேறி இன்றைய தினம் வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தது.
ஆனால் இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் விஜயலட்சுமியை காப்பாற்ற முடியவில்லை. அவரது உயிர் பிரிந்தது.

அதிமுக நிர்வாகி
இதையடுத்து மருத்துவமனைக்கு அதிமுக நிர்வாகிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றனர். அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் தெரிவித்தார். அது போல் முதல்வர் ஸ்டாலினும் நேரில் வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஓபிஎஸ் கண்களில் கண்ணீர்
ஸ்டாலினை கண்டதும் ஓபிஎஸ் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. பின்னர் அவரை ஸ்டாலினும் துரைமுருகனும் தேற்றினார்கள். இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும் மருத்துவமனைக்கு நேரில் வந்து விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரை கண்டதும் ஓபிஎஸ் கண்ணீர் விட்டார். அவரை தோளில் தட்டிக் கொடுத்து சசிகலா தாயுள்ளத்துடன் ஆறுதல் தெரிவித்தார்.

சசிகலாவிடம் விளக்கிய ஓபிஎஸ்
பின்னர் விஜயலட்சுமியின் மருத்துவ சிகிச்சை குறித்து அழுதவாறே ஓபிஎஸ், சசிகலாவிடம் விளக்கினார். சசிகலாவும் மிகவும் இறுக்கமான முகத்துடனேயே இருந்தார். இது போன்ற துக்க நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்து கொள்ளும் சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரது உடல்நிலையை நேரில் போய் விசாரித்தார் சசிகலா.

மதுசூதனன் மறைவு
பின்னர் மதுசூதனனின் மறைவுக்கும் நேரில் போய் அஞ்சலி செலுத்தினார். அடுத்தது தற்போது ஓபிஎஸ்ஸின் மனைவி மறைவுக்கும் சசிகலா நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இரு நிகழ்வுகளுக்குமே இவர் அதிமுக கொடி பொருத்திய காரில்தான் வந்தார். அதிமுகவை எப்படியும் கைப்பற்றியே தீருவேன் என சசிகலா தனது தொண்டர்களிடம் தெரிவித்து வருகிறார்.

அதிமுகவினரோ சசிகலாவுக்கு சம்பந்தமில்லை
ஆனால் அதிமுகவினரோ சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். எனினும் சசிகலா தொடர்ந்து இது போன்ற துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஆனால் இதுவரை அதிமுகவை கைப்பற்ற அவர் எந்தமாதிரியான வியூகத்தை வகுத்துள்ளார் என்பது தெரியவில்லை. இது போல் அதிமுகவினருடன் நெருக்கம் காட்டி வருவது எந்த அளவுக்கு சசிகலாவுக்கு பலனை அளிக்கும் என்றும் தெரியவில்லை. அதிமுக விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications