அடுத்த "புள்ளியை" தட்டி தூக்கும் சசிகலா.. அதிருப்திகளின் பெரும் லிஸ்ட்.. அதிர்ச்சியில் அதிமுக..!
தோப்பு வெங்கடாசலம் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுகவின் முக்கிய புள்ளி ஒன்று சசிகலா பக்கம் தாவ இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால், அதிமுக தலைமை சற்று அப்செட் ஆகி உள்ளதாகவே தெரிகிறது.
திருப்பூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெருந்துறை தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு கே வெங்கடாசலம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இவருக்கு பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் ஒரு சீனியர்.. எனினும் ஆரம்பத்தில் அமைச்சர் பதவிக்காக முயன்றார்.. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அதனால் எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன.

தோப்பு வெங்கடாசலம்
ஆனால், எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, அவருடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.. இதற்கு காரணம், தோப்பு வெங்கடாசலத்தின் கடின உழைப்புதான்.. அது மட்டுமில்லை... தொகுதிக்குள் இவர் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகளால்தான் பெருந்துறையின் பெரும்பாலான வாக்கு சதவீதத்தை தன்னிடம் தக்க வைத்து கொண்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது.

அமைச்சர்
ஆனாலும், உட்கட்சி பூசல் நிலவி கொண்டிருக்கிறது.. அமைச்சர் கருப்பண்ணனுடனான மோதலும் நீடிப்பதாகவே தெரிகிறது.. அன்று, தோப்பு வெங்கடாசலம் கையில் இருந்த சுற்றுச்சூழல் துறை பறிக்கப்பட்டு கருப்பண்ணனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது... அப்போது முதலே இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் உள்ளன. ஒருகட்டத்தில், கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதமும் எழுதியிருந்தார்.

அதிமுக
இந்நிலையில், சமீபத்தில் நடந்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.. இதுதான், அதிமுகவில் தற்போது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் தரப்போவதில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.. அதனாலேயே தோப்பு வெங்கடாசலம் அதிருப்தி அடைந்ததாகவும், கூட்டத்தொடரை புறக்கணித்ததாகவும் சொல்கிறார்கள்..

தொகுதி
அதுமட்டுமல்ல, ஒருவேளை அவர் சசிகலா பக்கமும் தாவக்கூடும் என்றும் தகவல்கள் பரபரத்து வருகின்றன.. அதனால், தோப்பு வெங்கடாசலத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உளவுத்துறைக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.. அநேகமாக அவரை சமாதானப்படுத்தி சீட் தரப்படும் என்றே நம்பப்படுகிறது.. ஆனால், அதிமுகவில் இருந்தாலும் சரி, சசிகலா பக்கம் தாவினாலும் சரி, தொகுதி மக்களின் ஆதரவும், செல்வாக்கும் தோப்புக்கு எந்நேரமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!












Click it and Unblock the Notifications