3 பேருக்கு போன்.. முக்கியஸ்தருக்கு "சீக்ரெட்" கால்.. சசிகலாவிடம் போனில் பேசியது யார்? என்ன நடந்தது?
சென்னை: சசிகலா பேசியதாக போன் கால் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சசிகலா யாரிடம் போனில் பேசினார், ஏன் இந்த திடீர் போன் கால் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசியலில் இருந்தே சசிகலா மொத்தமாக ஒதுங்கிவிட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதுதான் சசிகலாவின் இந்த போன் கால் ஆடியோ வெளியாகி உள்ளது. அதிலும் சசிகலா இனி திரும்பி வர மாட்டார் என்று அதிமுகவில் சிலர் நம்பிய நிலையில் சசிகலாவின் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
கொரோனாவிற்கு பின் நான் மீண்டும் வருவேன், கட்சியை மீட்பேன் என்று சசிகலா இந்த போன் காலில் அதிமுக நிர்வாகியிடம் குறிப்பிட்டு இருக்கிறார். ஏன் இந்த திடீர் போன் கால்?
நடுவில் புக தயாராகும் சசிகலா.. 2வது ஆடியோ கிளப்பிய பரபரப்பு.. ஒன்றிணைவார்களா ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும்?
மெசேஜ்
அதிமுக தலைகளுக்கு சசிகலா அனுப்பும் மெசேஜ்தான் இந்த திடீர் போன் கால் என்கிறார்கள். அதிலும் அந்த ஆடியோ லீக் எல்லாம் ஆகவில்லை. சசிகலாவுக்கு தெரிந்தேதான் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது அதிமுக தலைவர்களுக்கு சசிகலா கொடுக்கும் "ஸ்டேட்மென்ட்" என்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் நடக்க போகும் மாற்றங்களுக்கான தொடக்க புள்ளிதான் இந்த ஆடியோ என்று கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் மாவட்டம்
அதன்படி சசிகலா முதல் கட்டமாக தனக்கு ஆதரவாக இருக்கும் டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இருக்கிறாராம். அதன்படிதான் இந்த போன் கால் சென்றுள்ளது என்கிறார்கள். சசிகலா ஒருவரிடம் பேசவில்லை, மூன்று பேரிடம் பேசி இருக்கிறார். அதில் ஒருவர் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி, இன்னொருவர் வட மாவட்டத்தை சேர்ந்தவர்.
எப்படி
தான் பார்த்து வளர்த்துவிட்ட நபர்களை, அல்லது தனது குடும்பம் மூலம் வளர்க்கப்பட்ட நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் சசிகலா இருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இப்படி சசிகலா பலரை வளர்த்துவிட்டு இருக்கிறார். முக்கியமாக சசிகலா மன்னார்குடியில் திவாகரன் மூலம் இன்னும் வாய்ஸ் உள்ளவராகவே இருக்கிறார். அதுபோக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஜாதி ரீதியாக பல நிர்வாகிகளுடன் சசி இன்னும் இருக்கிறார்.
போன்
அந்த வகையில்தான் சசிகலா மூன்று நிர்வாகிகளிடம் பேசி உள்ளார். இது அவரே செய்த சர்ப்ரைஸ் போன் கால் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலா பேசியவர்களில் பேராவூரணி அதிமுக ஐடி விங் துணை அமைப்பாளர் வினோத் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிமுகவில் இருந்தாலும் வெளிப்படையாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வந்தார். அதேபோல் திருவள்ளூரில் முன்னாள் அதிமுக தொண்டரும், தற்போது அமமுகவில் இருப்பவருமான லாரன்ஸ் என்ற தொண்டரிடம் பேசி உள்ளார்.
லாரன்ஸ்
லாரன்ஸ் அமமுகவில் பெரிய நிர்வாகி கிடையாது. ஆனாலும் இவரிடம் சசிகலா பேசி உள்ளார். இந்த ஆடியோவும் நேற்று இணையத்தில் வெளியானது. இதேபோல் இன்னும் சில அதிமுக, அமமுக நிர்வாகிகளிடமும் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த போன் கால் எல்லாமே திடீர் என ஏற்பாடு செய்யப்பட்டு, பேசப்பட்ட கால்கள் என்கிறார்கள். போன் வந்த போது சசிகலாதான் பேசுகிறார்கள் என்றே நிர்வாகிகளுக்கே தெரியவில்லை.
சில ஆடியோ
அதே சமயம் சசிகலா பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ எல்லாம் வெறுமனே தனது மனநிலையை அவர் வெளிப்படுத்தும் ஆடியோக்கள்தான். ஆனால் உண்மையில் சசிகலா இன்னும் பல முக்கிய நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். அது எல்லாம் ரெக்கார்ட் செய்யப்படவில்லை. பல அதிமுக தலைகளிடம் சசிகலா பேசி இருக்கிறார், அதெல்லாம் வெளியே வராது என்கிறார்கள்.. இப்போது வெளியானது சின்ன டீசர்தான் என்கிறார்கள்.
சீக்ரெட் கால்
முக்கியமாக தென் மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவரிடமும் சசிகலா சீக்ரெட்டாக பேசியுள்ளாராம். நீண்ட நேரம் இவர்கள் அதிமுகவில் கம்பேக் தருவது பற்றி பேசியுள்ளாராம். வெளியான ஆடியோக்கள் எல்லாம் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியது மட்டும்தான். என்னுடைய கதை இன்னும் முடியவில்லை என்று சசிகலா வெளிப்படுத்தும் வகையில் இந்த போன் கால் அமைந்துள்ளது. தனது ஆட்டத்தை தொடங்க போகிறேன் என்பதை வெளிப்படையாகவே சசிகலா அறிவித்துவிட்டு செயலில் இறங்கி உள்ளார்.. அடுத்த அவர் என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.