ஜெ. பாணியில் அதிரடியாக களமிறங்கும் சசிகலா... தென்மாவட்டத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட திட்டம்?
சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற போதும் ஜெயலலிதா பாணியில் அதிரடியாக சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் 2 தொகுதிகளில் சசிகலா போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா, டான்சி நில பேர வழக்கில் குற்றவாளி என தனிநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அது என்ன டான்சி நில பேர வழக்கு .டான்சி எனப்படும் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் நிலங்களை 1991-1996-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மிக குறைந்த விலைக்கு வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டன என்பது வழக்கு.

டான்சி வழக்கில் குற்றவாளி
இந்த டான்சி வழக்கில்தான் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தனிநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

ஜெ. 4 தொகுதி வேட்புமனு
ஆனால் ஜெயலலிதாவோ அதிரடியாக புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இருப்பினும் இந்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த தேர்தலில் அதிமுக வென்ற நிலையில் தேர்தலில் போட்டியிடாமலேயே அன்றைய ஆளுநர் பாத்திமா பீவியால் ஜெயலலிதா முதல்வராக்கப்பட்டார். இதற்கு எதிரான வழக்கில் ஜெயலலிதா முதல்வரானது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஜெயலலிதா பதவி விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார்.

சசிகலா 2 தொகுதிகளில் போட்டி?
இப்போது ஜெயலலிதா பாணியிலேயே சசிகலாவும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறாராம். ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் ஜெயலலிதாவை போல இந்த முறை சசிகலா 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் ஜாதியினர் அதிகம் உள்ள 2 தொகுதிகளை குறிவைத்து சசிகலா வேட்புமனுவைத் தாக்கல் செய்வது என முடிவு செய்திருக்கிறாராம்.

ஜெ.வுக்கு கிடைக்காத வாய்ப்பு
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தலாம் என்பதும் சசிகலாவின் திட்டமாம். 2001-ல் ஜெயலலிதாவுக்கு கிடைக்காத வாய்ப்பு இப்போது சசிகலாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது சிக்கிமில் தமாங், இதேபோல் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்திருந்த போதும் தேர்தலில் போட்டியிடவும் முதல்வராகவும் தேர்தல் ஆணையம் விதி விலக்கு அளித்திருந்தது. இந்த ஒரு பாயிண்ட்டை வைத்து தமக்கும் விதிவிலக்கு கோருவது, தம்மையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வாதாடுவது என்கிற நிலைப்பாட்டை சசிகலா எடுத்திருக்கிறாராம். இதனால் அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை அமமுகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications