எடப்பாடி கோட்டையில்.. மாஸாக பிளான் போட்ட சசிகலா! ஆனால் இப்போதைக்கு வேண்டாம்! அவரே சொன்ன காரணம்!
சென்னை : எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் என கூறிவரும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அதற்கு முன்னதாக தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை, மூத்த அமைச்சர்கள் துணையுடன் முதல்வர் பதவியில் அமர்த்தி விட்டு சென்றார்.

சசிகலா
அதன் பின்னர் ஆட்சி மாறவில்லை என்றாலும் காட்சிகள் மாறின. சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி அதன் பின்னர் கட்சியிலிருந்து அதிருப்தியில் வெளியேறி தனியாக செயல்பட்ட ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியினை நிறைவு செய்தார்.

சசிகலா பயணம்
இதற்கிடையில் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதோடு அவருடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கூறினார். பொதுச்செயலாளர் பதவியை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் அதிகார யுத்தம் நடத்தி வரும் நிலையில் சசிகலா டிடிவி தினகரன் சேர்ந்து அவர் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இரு அணியினரும் இணைவார்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தள்ளிப்போகிறது
இந்த நிலையில் தான் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சசிகலா திட்டமிட்டிருந்தபடி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை முதல் சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சசிகலா திட்டமிட்டு இருந்த நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் காரணமாக சசிகலாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து நாடு முழுவதும் 11ம் தேதி என்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுவதால் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த புரட்சி பயணம் ஒரு நாள் தள்ளி வைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. வருகிற 12-ஆம் தேதி அன்று சேலத்திலும் 13-ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டத்திலும் சசிகலா பயணம் மேற்கொள்வார் எனவும் இந்த புரட்சி பயணத்தில் கழக நிர்வாகிகள் முன்னோடிகள் கலந்து கொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications