சின்னம்மா ரிட்டர்ன்ஸ்! தர்மயுத்தம் 2.0! தயாராகும் ஓபிஎஸ்! இபிஎஸ்க்கு ஷாக் வைத்தியம் அளித்த வைத்தி..!
சென்னை : அதிமுகவில் சசிகலா தலைமையின் கீழ் செயல்பட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தயாராக உள்ளதாக தங்களிடம் சொன்னார் என சசிகலாவின் தீவிர ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதன் கூறியிருப்பது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் மீண்டும் சசிகலா விஜயம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
அண்மையில் நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி நிர்வாகிகள் சிலர் முன்வைத்தனர்.
குறிப்பாக சிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சில கட்சி நிர்வாகிகள் குரல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சசிகலா தரப்பு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

சசிகலா திட்டம்
கடந்த சில நாட்களாகவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளான புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன் ஆகியோர் பேசி வந்தனர். இந்நிலையில் தற்போது அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினர். இதனால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சசிகலா தலைமை
இந்நிலையில் சசிகலா தலைமையை ஏற்க ஓபிஎஸ் தயாராக இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனால் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதம் எழுந்தது. ஆனால் சசிகலாவை ஓபிஎஸ் தரப்பு நேரிடையாக சந்திக்கவில்லை சசிகலா கூறிய சில முக்கிய தகவல்களை சசிகலா ஆதரவு நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ்ஸிடம் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ் அதனை சிந்திப்பதாகக் கூறியிருக்கிறார்.

தீவிர பேச்சுவார்த்தை
இதனால் உற்சாகமடைந்த சசிகலா தரப்பு ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து பேசுவதற்காக சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவரும் அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவருமான ஆவின் வைத்தியநாதனை அனுப்பி வைத்தனர். சென்னை பசுமை வழி சாலை யில் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய ஆவின் வைத்தியநாதன் சசிகலா தரப்பில் இருந்து கூறப்பட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆதரவு நிலைப்பாடு
அப்போது கடந்தகாலம் கசப்புகளை மறந்து சசிகலா ஓபிஎஸ்-க்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க ஓபிஎஸ் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டன. கடந்த ஆண்டுகளில் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து ஓபிஎஸ் தற்போது எடப்பாடிக்கு எதிராக இருக்கும் நிலையில் எடப்பாடியை விட சசிகலாவுடன் கை கோர்க்கலாம் என முடிவெடுத்துள்ளார்.

இபிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம்
தற்போது சசிகலா விருப்பப்பட்டால் பொதுக்குழுவில் கலந்து கொள்வார் என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆவின் வைத்தியநாதன் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த சசிகலாவுடன் ஓபிஎஸ் நிச்சயம் கை கோர்ப்பார் என செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். ஏற்கனவே அதிமுகவில் நுழைய நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்த சசிகலா தரப்பினருக்கு இந்த தகவல் உற்சாகம் கொடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ்-ன் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட மேலும் சில முக்கிய நிர்வாகிகளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications