கணக்கு சரியா வருதே.. ‘மீண்டும்’ ரஜினிகாந்த்.. என்ன திட்டம்? - சத்யநாராயணராவ் சொன்ன தகவலால் பரபரப்பு!
சென்னை : ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணராவ், ரஜினியின் அடுத்தகட்ட திட்டம் பற்றிப் பேசியிருப்பது, மீண்டும் அரசியல் அரங்கில் பலத்த விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு என ரஜினிகாந்த்தின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை நோக்கி அடியெடுத்து வைத்திருப்பதாக பேச்சுகளைத் தொடங்கி வைத்தன.
இந்நிலையில், படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்ய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ரஜினிகாந்த்தின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை குறித்த தகவல்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியிருக்கின்றன.

ரஜினி அரசியல்
கடந்த கால் நூற்றாண்டு காலமாக அரசியலுக்கு வருவதாக மறைமுகமாகப் பேசி வந்த ரஜினிகாந்த கடந்த 2017ஆம் ஆண்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம், நேர்காணல் எனபரபரப்பை கூட்டினார். இதனால், ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அரசியல் ஆசையை கைவிடுவதாகக் கூறி ஒட்டுமொத்த விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.

அடுத்தடுத்து அதிரடி சந்திப்பு
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியது, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஆளுநருடன் அரசியல் பற்றி பேசியதாகத் தெரிவித்தார்.

பரபர பேட்டி
ரஜினியின் இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, ரஜினியை பிரசார ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதற்கு பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏதேனும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக ரஜினிகாந்த் நியமிக்கப்படுவார் என்றும் சில செய்திகள் அடிபட்டன. எப்படியும், தங்களுக்கான வாய்ஸாக ரஜினியை பாஜக பயன்படுத்தியே தீருவது என முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக கணக்கு?
சில ஆண்டுகளுக்கு முன்பு இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினிகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், மீண்டும் அவரது கவனம் அரசியல் பக்கம் திரும்பியிருக்கும் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே இளையராஜா, பிடி உஷா உள்ளிட்ட தென் மாநில பிரபலங்கள் பலருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளது பாஜக. அதேபோல, ரஜினிக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெறலாம் என கணக்குப் போட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

ஷூட்டிங்கிற்குப் பிறகு
ரஜினிகாந்த் தற்பொது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமே அவரது திரை வாழ்வின் கடைசிப் படமாக இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு, அவர் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் பரபரத்தன. ஆனாலும், பாஜகவோ, ரஜினி தரப்போ இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பமே நிலவி வருகிறது.

சத்ய நாராயண ராவ்
இந்நிலையில்தான், ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயணராவ் இன்று சென்னையில் இரு அறக்கட்டளை நிகழ்வில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார் என்றும் ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அமைய வாய்ப்பு உள்ளது என்றும் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கணக்கு கரெக்டா வருதே
ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ள தகவல், ஏற்கனவே பரவிய செய்திகளுக்கு தூபம் போட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு தனது ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று, பாஜக போட்டுக் கொடுக்கும் திட்டத்தின்படி செயல்படுவார் என்று யூங்கள் கிளம்பி இருக்கின்றன. அதுவும் நேரடி அரசியலாக அல்லாமல், ஆளுநர் போன்ற பதவிகளைப் பெற்றுக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications