ஓபிஎஸா- எடப்பாடியா? அதிமுக உட்கட்சி விவகாரம்.. இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்! சத்யபிரதா சாகு
சென்னை: அதிமுக உட்கட்சி பிரச்சினை குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜனநாயகத்தில் போலி வாக்காளர்கள் என்பது பெரிய சிக்கல் தான். இதைக் களைய மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலை ஆதர் எண்ணுடன் இணைக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
'அவருக்கு’மட்டும்தான் அனுமதி! ஓபிஎஸ் ஆதரவாளரை வெளியே விரட்டிய போலீஸ்! தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபர!
தேர்தல் ஆணையம்
அதேநேரம் வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. மக்கள் தானாக முன்வந்து இதனைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தப் பணிகளைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 2024இல் மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கு முன்பு இதை முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆலோசனை
வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் எண்ணை இணைக்க '6 பி' என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக அனைத்து கட்சி கூட்டத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் உடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்தினார்.
ஓபிஎஸ் & எடப்பாடி
இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் தரப்பில் இருந்து தனித்தனியாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோவை செல்வராஜும் கலந்து கொண்டனர். முதலில் வந்த கோவை செல்வராஜ், அதிமுக என்ற போர்ட் இருந்த இடத்தில் அமர்ந்தார்.
விளக்கம்
சிறிது நேரம் கழித்து வந்த ஜெயக்குமார், அந்த போர்ட்டை எடுத்து தன் பக்கம் வைத்துக் கொண்டார். மேலும், இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தனித்தனியாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும் கோவை செல்வராஜும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறினார். இந்தச் சூழலில் இது தொடர்பாக சத்யபிரதா சாகு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம்
ஓபிஎஸ்- எடப்பாடி பிரச்சினை குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அதிமுக உட்கட்சி பிரச்சினை குறித்து இந்தியே தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, இரு தரப்பும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.