அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவு மூடல்.. பள்ளிக் கல்வித்துறை முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி!
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் 11ம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும். ஏற்கனவே அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அம்மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்தங்கிய மற்றும் எழை மாணவர்கள் படிக்கும் படிப்புகளை, பள்ளிக் கல்வித்துறை மூடி வருவதற்கு ஆசிரியர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். சில மாதங்களுக்கு முன் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனால் பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பில் மாற்றம் இருக்குமா என்று சிலர் சந்தேகமும் எழுப்பி உள்ளனர்.