ஆர்எஸ்எஸ் சித்தாந்த ஆதரவு! மணிகண்ட பூபதி நியமனத்தை ரத்து செய்யுங்க! எஸ்டிபிஐ தலைவர் வலியுறுத்தல்
சென்னை: கல்வி தொலைக்காட்சியின் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ள மணிகண்ட பூபதி முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு எண்ணமும் கொண்டவர் என பல்வேறு தரப்பினரால் வெளிப்படையாக குற்றம்சாட்டப்படுவதால் அவரது நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி என்பவர் நியமனம் செய்யப்பட்டது. இதனை தமிழக பள்ளிக்கல்வி துறை செய்தது. இதற்கு திமுகவினர் மற்றும் திமுக தோழமை கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தற்போது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. மணிகண்ட பூபதி ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர் எனக்கூறி அவரது நியமனத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மணிகண்ட பூபதி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்டிபிஐ கண்டனம்
இந்நிலையில் தான் மணிகண்டன பூபதி நியமனத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியானது கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அனைத்து வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தொடங்கி, தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருகின்றது.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்
முழுக்க முழுக்க கல்வி அதிகாரிகள் மூலம் செயல்பட்டு வந்த கல்வி தொலைக்காட்சிக்கு தற்போதைய திமுக அரசு தலைமைச் செயல் அதிகாரியை (CEO) நியமிக்க முடிவு செய்து, அதற்கான விண்ணப்ப அறிவிப்புகளை கடந்த மே 28 ஆம் தேதி அறிவித்தது. சுமார் 70 பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பரப்பி வரும் சாணக்யா யூ-ட்யூப் தொலைக்காட்சியின் இணை நிறுவனர் மணிகண்ட பூபதி என்பவர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு கவனம் கொள்ள வேண்டும்
ஒரு நிறுவனத்தின் கொள்கை வழிப் போக்கை தீர்மானிப்பவர் அதன் சி.இ.ஓ என சொல்லப்படும் தலைமைச் செயல் அதிகாரி தான் என்கிற போது, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவரும் சாணக்யா சேனலின் இணை நிறுவனர் ஒருவரை, அதற்கு நேர் எதிரான கல்விக் கொள்கை கொண்ட தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வழிகாட்டியாக நியமிப்பது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது. மணிகண்ட பூபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது எனவும், இதில் தமிழக கவர்னர் ஆர்வம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அத்தகைய நியமனம் மூலம் தமிழக மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதாக ஆகிவிடும் என்ற பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடனே ரத்து செ்ய வேண்டும்
முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு எண்ணமும் கொண்டவர் என பல்வேறு தரப்பினரால் வெளிப்படையாக குற்றம்சாட்டப்படும் மணிகண்ட பூபதியின் நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, கல்வி, சமூகநீதி சிந்தனை, ஊடகத்துறை அனுபவம் கொண்ட தகுதியுள்ள ஒரு நபரை தமிழக அரசு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதற்கான தகுதியுள்ள நபர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ளனர். தமிழக அரசு அவர்களை கண்டறிந்து நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விழிப்புடன் செயல்பட வேண்டும்
சமூக நீதி ஆட்சி என கூறப்படும் திமுக ஆட்சியில் இதுபோன்று முக்கிய பொறுப்புக்கள், நியமனங்கள், உத்தரவுகளில் சமூக நீதிக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவது தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றது. சமூக நீதி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள் சுட்டிக்காட்டிய பின்னரே அதுபோன்ற உத்தரவுகள் வாபஸ் பெறப்படுவது அல்லது நிறுத்தி வைப்பது போன்றவை மேற்கொள்ளப்படும் நிலையில், முன்கூட்டியே அதுதொடர்பான தகவல்கள் உளவுத்துறை மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லையா? என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆகவே, இதுபோன்ற சறுக்கல்கள், தவறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications