முதல் ஆளாக களத்தில் சீமான்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி! பரபர அறிவிப்பு!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளின் சார்பாக யார் போட்டியிடப்போவது என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நாதக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார் சீமான்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் காரணமாக இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவே போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சியை களமிறக்குமா என்ற கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு முக்கியமான இடைத்தேர்தல்..போட்டியிடும் வேட்பாளர் யார்.. ஜி.கே.வாசன் சூசக தகவல்
ஈரோடு கிழக்கு
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். சமீபத்தில் திருமகன் ஈவேரா எம்எல்ஏ உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இடைத்தேர்தல்
இந்திய தேர்தல் ஆணைய விதிமுறையின்படி, காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். நேற்று திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் யார் போட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடக்கூடும் எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டியிடப்போகிறது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் குழப்பத்தில் இருப்பதால், அதிமுக என்ன முடிவை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சீமான் அறிவிப்பு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம் இறங்குகிறது. தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வோம். நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன். எனத் தெரிவித்துள்ளார்.